ADDED : நவ 24, 2025 09:28 AM

மரங்கள் வளர்ப்பது; சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் உத்தமபாளையம் நன்செய் பசுமை அறக்கட்டளையும், இராயப்பன்பட்டி ஆலிலை பசுமை இயக்கமும் தொடர்ந்து பள்ளிகளில் பசுமைத் தோட்டம் உருவாக்க விழிப்புணபுணர்வு ஏற்படுத்துகின்றனர்.
கம்பம் நகரில் வீதிகளில் மரங்களை தேட வேண்டியுள்ளது. சுத்தமாக மரங்கள் இல்லை. நகரின் விரிவாக்கப் பகுதியான காந்திநகர், சி.எம்.எஸ்., நகர் போன்ற இடங்களில் மட்டும் மரங்கள் வளர்ந்துள்ளன. உத்தமபாளையத்தை சேர்ந்த நன்செய் அறக்கட்டளை கம்பம் நகரின் வீரப்ப நாயக்கன் குளம், கம்பம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து, தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.
நகரத்திற்குள் உள்ள புறம்போக்கு இடங்களை கண்டறிந்து குறுங்காடு ஏற்படுத்த நன்செய் அமைப்பு முயற்சி செய்து வருகிறது. அதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது குறித்து விழிப்புணர்வை நன்செய் பசுமை அறக் கட்டளையினர் துவங்கி உள்ளனர். பயிர் கழிவுகளை தீ வைத்து எரிப்பதை தடுக்க நன்செய் பசுமை இயக்கமும் விவசாயிகளுக்கு கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளனர். கம்பம் மாசில்லா நகரமாக மாற வயல்களில் தீ வைப்பதை தவிர்க்க வேண்டும்.
குறுங்காடு செந்தில், ஒருங்கிணைப் பாளர், நன்செய் பசுமை அறக்கட்டளை: எங்கள் அமைப்பின் சார்பில் இதுவரை 80 ஆயிரம் மரக்கன்றுகள் மாவட்டம் மட்டும் இன்றி திருவள்ளுர், சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடவு செய்துள்ளோம். தேனி கலெக்டர் அலுவலகம், உத்தமபாளையம், போடி கல்லுாரிகளில் குறுங்காடு அமைத்துள்ளோம். கம்பம் வீரப்ப நாயக்கன்குளம், அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். குறுங்காடு அமைக்க இடம் தேர்வு நடந்து வருகிறது. வீடுதோறும் மரக்கன்றுகள், மூலிகை நாற்றுகளை வளர்க்க ஊக்கப்படுத்த உள்ளோம். குறுங்காடு அமைப்பதால் சுற்றுச் சூழலுக்கான நல்ல சூழ்நிலை ஏற்படுகிறது. பறவைகள் தங்கள் எச்சத்தின் மூலம் பல மரக்கன்றுகளை உருவாக்கும். குறுங்காடுகள் பறவைகள் இன உற்பத்திற்கு உதவியாக இருக்கும். எனவே கம்பம் நகர் அல்லது நகரை ஒட்டிய பகுதிகளில் குறுங்காடு அமைக்க முயற்சிகள் செய்து வருகிறோம்., என்றார்.
பசுமைத்தோட்டம் அக்கீம், நன்செய் பசுமை அறக்கட்டளை: சுற்றுப்புறச்சூழல் மாசு படாமல் இருக்க மரங்கன்றுகளை அதிக இடங்களில் நடவு செய்து தொடர்ந்து அதை பராமரிப்பதும் முக்கிய கடமையாகும். மேலும் எங்கள் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் நடக்கும் விசேஷங்களில் பங்கேற்பவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். மரம் வளர்ப்பில் பொதுமக்களிடம் மாணவ குழுக்கள் மூலம் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். கண்மாய் கரைகளில் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். க கம்பத்தில் அடர் வனம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இடம் தேர்வில் தடங்கல்கள் உள்ளன. பல்லுயிர் பெருக்கம் ஏற்பட குறுங்காடுகள் உதவும். சாலை விரிவாக்கம் என்று மரங்களை வெட்டி சாய்க்கின்றனர். எனவே இங்கு மட்டும் இல்லாமல்மல்லாது மாவட்டம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு அடர் வனம் அமைக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்படும். அனைத்து பள்ளி வளாகங்களிலும் மூலிகை செடிகள், மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்க்க பள்ளித்தோட்டங்கள் அமைக்க அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை துவங்க உள்ளோம்., என்றார்.

