ADDED : டிச 01, 2024 07:31 AM
சின்னமனுார் : சின்னமனுாரில் ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் நூலக கட்டுமான பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
சின்னமனூரில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான புத்தகங்களை கொண்ட அறிவுசார் நூலகம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. மத்திய அரசின் தேர்வாணையம் நடந்தும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனவியல் பணி உள்ளிட்ட தேர்வுகளுக்கும், மாநில அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை 2022 செப்டம்பரில் நடைபெற்று பணிகள் துவங்கியது. பணி துவக்கி 2 ஆண்டுகளை கடத்தும் நிறைவு பெறவில்லை.
நகராட்சிகளின் மண்டல பொறியாளர் ஆண்டிற்கு ஒரு முறை ஆய்வு செய்கிறார். ரூபாய் ஒரு கோடி மேல் திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை மண்டல பொறியாளர் அடிக்கடி ஆய்வு செய்து பணிகள் தரமாக உள்ளதா என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி, மண்டல பொறியாளர்கள் கள ஆய்வை கண்காணித்து ஆமை வேகத்தில் நடக்கும் அறிவுசார் நூலக கட்டட பணிகளை துரிதப் படுத்த வேண்டும். விரைவில் அறிவுசார் நுாலகம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.
