ADDED : பிப் 16, 2025 02:15 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் முறைப்பாசன அடிப்படையில் நேற்று நிறுத்தப்பட்டது.
இம்மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிச. 18 முதல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
முறைப்பாசன அடிப்படையில் சில நாட்கள் நீர் திறந்து விடப்பட்டும். சில நாட்கள் நிறுத்தியும் வைக்கப்படுகிறது.
பிப்.10ல் கால்வாய் வழியாக வினாடிக்கு 450 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீர் மறுநாள் வினாடிக்கு 525 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
நேற்று காலை கால்வாய் வழியாக திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 300 கன அடி வீதம் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக செல்கிறது. அணை நீர்மட்டம் 63.35 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி).
மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.