/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் குறைந்தது மழை - நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல்
/
பெரியாறு அணையில் குறைந்தது மழை - நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல்
பெரியாறு அணையில் குறைந்தது மழை - நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல்
பெரியாறு அணையில் குறைந்தது மழை - நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல்
ADDED : ஜூன் 19, 2025 10:52 PM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் தொடர்ந்து பெய்து வந்த மழை நேற்று குறைந்ததால் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் மே23ல் துவங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து 115 அடியாக இருந்த பெரியாறு அணை நீர்மட்டம் ஜூன் 2ல் 15 அடிக்கு மேல் உயர்ந்து 130.55 அடியை எட்டியது. அதன்பின் மழை சற்று குறைந்தது. இதனால் நீர்வரத்தும் குறைந்து நீர்மட்டம் ஜூன் 14ல் 128.20 அடியானது.
அதன்பின் மீண்டும் பருவ மழை தீவிரமடைந்து அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்தது. நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 132.15 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). தற்போது மீண்டும் மழை குறைந்து 5323 கன அடியாக இருந்த நீர்வரத்து 3147 கன அடியாக குறைந்தது.
தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1800 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5200 மில்லியன் கன அடியாகும்.
பெரியாறில் 18.2 மி.மீ., தேக்கடியில் 6.2 மி.மீ., மழை பதிவானது.
சிக்கல்
ரூல்கர்வ் நடைமுறைப்படி ஜூன் 30 வரை நீர்மட்டம் உயர்ந்த பட்சமாக 136 அடி மட்டுமே தேக்கமுடியும். தற்போது தொடர்ந்து பெய்து வந்த மழையால் நீர்மட்டம் 136 அடியை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்தனர்.
அவ்வாறு நடந்திருந்தால் தற்போது நடந்து வரும் முதல் போக நெல் சாகுபடிக்கும் அதனைத் தொடர்ந்து நடக்கும் இரண்டாம் போக சாகுபடிக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. ஆனால் மழை குறைந்ததால் நீர்மட்டம் உயருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திட்டம்
தற்போது அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு 1800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இதை 2500 கன அடியாக அதிகரிக்க தமிழக நீர்வளத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். கூடுதல் நீர் திறக்கும் போது அணையின் நீர்மட்டம் வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது. அதனால் நீர் திறப்பை குறைத்து அணையில் நீர் இருப்பை நிலைநிறுத்த வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.