/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் பம்பிங் செய்வதில் உள்ளாட்சி அமைப்புகள் திணறல்: முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீர் திறக்க வலியுறுத்தல்
/
குடிநீர் பம்பிங் செய்வதில் உள்ளாட்சி அமைப்புகள் திணறல்: முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீர் திறக்க வலியுறுத்தல்
குடிநீர் பம்பிங் செய்வதில் உள்ளாட்சி அமைப்புகள் திணறல்: முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீர் திறக்க வலியுறுத்தல்
குடிநீர் பம்பிங் செய்வதில் உள்ளாட்சி அமைப்புகள் திணறல்: முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீர் திறக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 17, 2025 05:58 AM

கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் குடிநீர் பம்பிங் செய்வதில் திணறி வருகின்றனர். முல்லைபெரியாற்றில் இருந்து குடிநீருக்கு 150 கன அடி திறக்க உள்ளாட்சி அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஊர்களின் குடிநீர் தேவையை முல்லைப்பெரியாறு அணை நீர் போக்குகிறது.
எந்தாண்டும் இல்லாத நிலையில் தற்போது கடும் வெயில் நிலவுகிறது. இதனால் குடிநீரின் தேவை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழலில் முல்லைப் பெரியாற்றிலிருந்து பம்பிங் செய்வதில் சிக்கல் எழுந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 113.90 (கடந்தாண்டு 115.30 ) அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 105 கன அடி நீர் வரத்தை அப்படியே விடுவிக்கப்படுகிறது.
கூடலூர், கம்பம், சின்னமனூர் நகராட்சிகள், காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், ஓடைப்பட்டி, மார்க்கையன்கோட்டை , குச்சனூர் பேரூராட்சிகள், 32 ஊராட்சிகளின் குடிநீர் தேவையை இந்த 105 கன அடியில் பூர்த்தி செய்ய வேண்டும்.
லோயர்கேம்ப், உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, சின்னமனூர், சீலையம்பட்டி, எல்லப்பட்டி ஆகிய இடங்களில் பம்பிங் ஸ்டேசன்கள் உள்ளன.
லோயர்கேம்பில் உள்ள கம்பம் நகர் குடிநீர் திட்ட பம்பிங் ஸ்டேசனில் 150 குதிரை சக்தி கொண்ட மோட்டார் 24 மணி நேரமும் பம்பிங் செய்து கொண்டே இருக்கிறது. இரண்டு 75 குதிரை சக்தி கொண்ட மோட்டார்களும் பம்பிங் பணியில் உள்ளது.
லோயர் கேம்பில் பம்பிங் ஸ்டேஷனில் கூடலூர், புதுப்பட்டி, கோம்பை, பண்ணைப் புரம், தேவாரம் திட்டம் மற்றும் இதர ஊர்களுக்கான பம்பிங்கிற்கே தற்போது வெளியேற்றப்படும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மேலும் லோயர்கேம்பிலிருந்து சின்னமனூர் வரை வரும் வழியில் விவசாயத்திற்கென தண்ணீர் எடுப்பது, வெயில் தாக்கத்தில் ஆவியாவது காரணங்களால் வெகுவாக தண்ணீர் குறைந்து விடும்.
இதனால் ஊராட்சிகளுக்கென குடிநீர் பம்பிங் செய்வதில் பெரிய அளவில் பிரச்னைகள் எழுந்துள்ளது.
எனவே கம்பம் பள்ளத்தாக்கில் குடிநீர் தட்டுப்பட்டு ஏற்படுவதை தவிர்க்க, தற்போது 105 கன அடிநீரின் அளவை குறைந்த பட்சம் 150 முதல் 200 கன அடியாக அதிகரிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.