ADDED : ஆக 21, 2026 06:44 PM
போடி, ஆக. 22 -
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் செயல் விளக்க திடல் அமைப்பதற்கு மானியத்தில் மக்காச்சோளம் விதைகள், இடு பொருட்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என போடி வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது : இத் திட்டத்தில் மக்காச்சோளம் செயல் விளக்க திடல் அமைப்பதற்கு 80 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு எக்டருக்கு ரூ.11,500 மானியத்தில் செயல் விளக்க இடு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனுடன் ஒரு எக்டருக்கு 15 கிலோ மக்காச்சோளம் விதைகள், 12.5 கிலோ நுண்ணூட்ட சத்துக்கலவை, ஒரு லிட்டர் திரவ அசோஸ் ஸ்பைரில்லம், திரவ பாஸ்போ பாக்டீரியா, 4 கிலோ மெட்டாரைசியம் (நன்மை செய்யும் பூஞ்சானம்) உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது. விவசாயிக்கு ஒரு தொகுப்பில் குறைந்தது ஒரு ஏக்கர், அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை பயன் பெறலாம். செயல் விளக்க திடல் 10 ஏக்டர் சேர்ந்த தொகுப்பாக அமைக்க வேண்டும். இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்படும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் நகல், போட்டோ உடன் கூடிய வங்கி புத்தகம் போன்ற ஆவணங்களுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
