ADDED : டிச 31, 2024 06:42 AM
மூணாறு: மூணாறில் நேற்று சிறிது நேரம் மிதமான மழை பெய்த நிலையில் குளிர் மீண்டும் போக்கு காட்டியது.
மூணாறில் ஆண்டு தோறும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி விடும். இந்தாண்டு ' பெஞ்சல்' புயல், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால், குளிர் போக்கு காட்டியது. காலை வேளையில் குறைந்தபட்ச வெப்பம் 7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த நிலையில் டிச.24ல் 2 டிகிரியாக குறைந்து மூணாறை சுற்றியுள்ள கன்னிமலை, குண்டளை, செண்டுவாரை, தேவிகுளம் உள்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் உறைபனி ஏற்பட்டது. அதனால் குளிர் அதிகரித்த நிலையில், அதே காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை வானம் மழை மேகம் சூழ்ந்து தென்மலை, குண்டுமலை, கன்னிமலை உள்பட பல எஸ்டேட்களில் சாரல் மழை பெய்தது. அதேபோல் மூணாறு நகரில் பகல் 12:00 முதல் 2:00 மணி வரை மிதமான மழை பெய்ததால் குளிர் மீண்டும் போக்கு காட்டியது. எனினும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றதாக அமைந்தது.