/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப் பாதையில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
குமுளி மலைப் பாதையில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : அக் 16, 2024 04:10 AM

கூடலுார் : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமுளி மலைப்பாதையில் தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லில்லி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசின் சமூக நலத்துறை கமிஷனரும், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான லில்லி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நேற்று குமுளி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து நிவாரண மையம் அமைப்பதற்காக லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலையில் மணல் மூடைகள், இதர உபகரணங்களை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டது. தேனி கலெக்டர் ஷஜீவனா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கம்பம்: அரசு மருத்துவமனையை கண்காணிப்பு அலுவலர் லில்லி ஆய்வு செய்தார். அங்கு படுக்கைகள் எண்ணிக்கை, அவசர கால சிகிச்சை பிரிவு , டாக்டர்கள் மற்றும் நர்சுகள் எண்ணிக்கை , மருந்து மாத்திரைகள் இருப்பு, விஷ முறிவு சிகிச்சைக்கான ஊசி மருந்துகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் கலெக்டர் ஷஜீவனா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்தனர்.