ADDED : ஆக 18, 2026 04:43 PM
தேனி, ஆக. 19–தேனியில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வினியோகம் செய்துள்ளதாக நகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்ட தலைநகர்தேனியில் மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மாநில நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நிரந்தர கடைகளில் அளவை விட கூடுதலாக ஆக்கிரமித்துள்ள தகர செட்டுகள், கட்டுமான பணிகள், ரோட்டோர கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று நோட்டீஸ் வினியோகிக்க துவங்கி உள்ளனர். ஆக., 27,28 ல் ஆக்கிரமிப்புகளை அகற்றம் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
