ADDED : டிச 22, 2024 02:14 AM
கூடலுார்:நீர்ப் பிடிப்பில் மழையின்றி முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
சமீபத்தில் பெய்த கன மழையால் டிச. 14ல் இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு அதிகபட்சமாக 17 ஆயிரத்து 651 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 10 அடி வரை உயர்ந்து டிச.16ல் 130 அடியை எட்டியது. அதன்பின் மழை சற்று குறையத் துவங்கியது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பதிவாகவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து 1028 கன அடியாக குறைந்தது. நீர்மட்டமும் குறைந்து 129.90 அடியாக உள்ளது (மொத்த உயரம் 152 அடி). தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1400 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4675 மில்லியன் கன அடியாகும்.
நேற்று பகல் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவியதால் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்து, நீர்மட்டமும் குறையும் வாய்ப்புள்ளது. இருந்த போதிலும் தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு போதுமானதாக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.