/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாண்டவர் மீண்டு வந்த விவகாரம் டி.என்.ஏ., சோதனை செய்ய முடிவு எரிக்கப்பட்டவர் யார் என போலீசார் குழப்பம்
/
மாண்டவர் மீண்டு வந்த விவகாரம் டி.என்.ஏ., சோதனை செய்ய முடிவு எரிக்கப்பட்டவர் யார் என போலீசார் குழப்பம்
மாண்டவர் மீண்டு வந்த விவகாரம் டி.என்.ஏ., சோதனை செய்ய முடிவு எரிக்கப்பட்டவர் யார் என போலீசார் குழப்பம்
மாண்டவர் மீண்டு வந்த விவகாரம் டி.என்.ஏ., சோதனை செய்ய முடிவு எரிக்கப்பட்டவர் யார் என போலீசார் குழப்பம்
ADDED : டிச 26, 2024 11:48 PM
கடமலைக்குண்டு:தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த சடலம் மகன் என நினைத்து எரித்த நிலையில், ஒரு மாதத்திற்கு பின் அவர் திரும்ப வந்ததால் இறந்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் டி.என்.ஏ., பரிசோதனைக்கு முடிவு செய்துள்ளனர்.
கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் தங்கமலை. இவருக்கு செல்வம் என்ற மனைவியும் மணிகண்டன் 32 என்ற மகனும் உள்ளனர். மணிகண்டனுக்கு முருகேஸ்வரி என்ற மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். இவர்கள் தங்கமலை வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டில் வசித்தனர்.
மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, மனைவி குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கடந்த மாதம் தங்கமலை மனைவி செல்வத்திடம், 'தான் கும்பகோணத்திற்கு வேலைக்கு செல்வதாகவும் இரு மாதங்களுக்குப் பின் திரும்பி வருவதாகவும் கூறி சென்றார். மணிகண்டன் வீட்டிலிருந்து நவம்பர் 13ல் துர்நாற்றம் வீசியது. பூட்டியிருந்த வீட்டை திறந்து பார்த்தபோது கட்டிலுக்கு அடியில் அழுகிய நிலையில் ஆணின் உடல் கிடந்துள்ளது. அளவுக்கு அதிகமாக மது குடித்து தனது மகன்தான் இறந்துவிட்டார் என செல்வம் கதறி அழுதார். கடமலைக்குண்டு போலீஸ் விசாரணைக்குப் பின் பிரேத பரிசோதனை செய்து உடலை எரித்தனர்.
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் மணிகண்டன் செல்வம் வீட்டிற்கு வந்துள்ளார். இறந்ததாகக் கருதி எரிக்கப்பட்டவர் உயிருடன் வந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்ததில் இறந்து கிடந்தவர் தங்கமலையாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
போலீசார் கூறியதாவது: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடல் உள்ளுறுப்பு மாதிரிகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. இறந்தவர் தங்கமலையா என்பதை டி.என்.ஏ., சோதனை மூலம் ஆய்வு செய்ய உள்ளோம். பரிசோதனை முடிவுகள் ஒத்துப் போகவில்லை என்றால் இறந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றனர்.