ADDED : மே 26, 2025 02:50 AM
இறைச்சி கடையில் தாக்குதல்
தேனி: அரண்மனைப்புதுார் வடிவேல் 42. இவர் அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் இறைச்சி வாங்க சென்றார். அங்கு இருவர் வடிவேலுடன் தகராறில் ஈடுபட்டனர். இருவரும் சேர்ந்து செங்கல்லால் வடிவேலை தாக்கினர். காயமடைந்தவர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது மகன் வசந்தகுமார் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு
தேனி: வீரபாண்டி கிழக்கு தெரு பாரதிதாசன் 25. இவர் தேனியில் தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். பணி முடித்து வீட்டிற்கு சென்ற போது, வீடு திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்த நிலையிலும், அதில் வைத்திருந்த பொருட்கள் காணாமல் போயிருந்தன. பீரோவில் வைத்திருந்த பணம் ரூ.35 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருந்தன. வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
தேனி: தேனி கொடுவிலார்பட்டியில் அரசு உதவி பெறும் பெண்கள் காப்பகம் செயல்படுகிறது. இங்கு கூடலுார் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் காணாமல் போன வழக்கில் தொடர்புடைய குள்ளப்பகவுண்டன்பட்டி ஆனந்தியை போலீசார் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் தங்க வைத்திருந்தனர். காப்பகத்தில் இருந்தும் காணாமல் போனார். காப்பகத்தில் பணிபுரியும் பத்மாவதி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.