கொலை மிரட்டல்: மூவர் கைது தேனி: பெரியகுளம் தென்கரை இந்திராபுரித் தெரு கரண்நாத் 22. இவரது அலைபேசிக்கு முத்துப்பாண்டி மனைவி அபிநயா 23, ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவதாக தவறாக நினைத்து, கரண்நாத், இவரது நண்பர்கள் பாலமுருகன் 20, 17 வயது சிறுவர், சந்துரு 25, ஆகிய நான்கு பேரும் அபிநயாவை ஆபாசமாக பேசி அவர் மீது கற்களை வீசி கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை போலீசார் கரண்நாத், பாலமுருகன், 17 வயது சிறுவனை கைது செய்தனர். தலைமறைவான சந்துருவை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுமி திருமணம்: ஐவர் மீது 'போக்சோ' பெரியகுளம்: இந்நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவரை அப்பகுதியை சேர்ந்த வல்லரசு 25, காதல் திருமணம் செய்தார். இதற்கு வல்லரசு தந்தை முருகவேல் 60, தாயார் முருகேஸ்வரி 55, உறவினர்கள் அழகர்சாமி 39, முத்துலட்சுமி 37, ஆகியோர் உடந்தையாக இருந்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் போதுமணி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, வல்லரசு உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.
வெடி வீசிய தகராறு: 6 பேர் மீது வழக்கு தேவதானப்பட்டி: அட்டணம்பட்டி தண்ணீர் தொட்டி தெரு சுரேஷ்குமார் 45. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்ராஜூக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் தீபாவளி அன்று சுரேஷ்குமார் வீட்டில், பொன்ராஜ் உறவினர் அன்புச்செல்வம் வெடியை துாக்கி வீசினார். இதுகுறித்து தட்டிக்கேட்ட சுரேஷ்குமாரை, அன்புச்செல்வம் பிடித்துக்கொள்ள பாபு, பிரகாஷ், கிஷோர், சிவபாண்டி, பிரசன்னா சங்கர் ஆகியோர் தாக்கி, காயப்படுத்தினர். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சுரேஷ்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் அன்புச்செல்வம் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ரோடு மறியல்: 14 பேர் மீது வழக்கு தேனி: டொம்புச்சேரியில் பிறந்தநாள் விழாவில் வெடி வெடித்தது தொடர்பாக இருதரப்பு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். ரோடு மறியலில் ஈடுபட்ட சுருளி, கூழ்பாண்டி, பாண்டிச்செல்வம் உள்ளிட்ட 14 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டொம்புச்சேரி வி.ஏ.ஓ., மகேந்திரகுமார் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவர் மாயம் தேனி: பாரஸ்ட் ரோடு 3வது தெரு வீரமார்த்தாண்டன். இவரது 14 வயது மகன், தேனியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சரிவர பள்ளி செல்லாமல் இருந்தார். இதனால் ஆசிரியர் கண்டித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவரது தாய் தேவிகாவுடன் பள்ளிக்கு மாணவர் சென்றார். செல்லும் வழியில், தாயிடமிருந்து ஓடினார். பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. தேவிகா புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
தேனி: வாழையாத்துப்பட்டி கூலித்தொழிலாளி செல்லப்பாண்டி 46. உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயக்க நிலையில் இருந்தவரை மீட்டு பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லபாண்டியை கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவரின் மகன் அருண்குமார் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

