ADDED : ஜன 02, 2026 05:44 AM
மேலாளரை தாக்கிய மூவர் கைது
தேனி: மதுரை திருப்பரங்குன்றம் பழனிவேல்ராஜ் 38, தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேலாளராக உள்ளார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் செல்வம் மனைவி மகேஷ்வரி அறிமுகமாகினார். இருவரும் பழகினர். மனைவியை செல்வம் கண்டித்ததால், மகேஷ்வரி பெண்கள் காப்பகத்தில் தங்கினார். கணவன், மனைவி சமாதானம் ஆகி வீட்டிற்கு சென்றனர். இச்சம்பவம் பற்றி பழனிவேல்ராஜூவிற்கு, மகேஷ்வரி தகவல் தெரிவித்தார். இருவரும் பழனிசெட்டிபட்டியில் சந்தித்து எஸ்.பி., அலுவலகம் புறப்பட்டனர். அங்கு வந்த மகேஷ்வரியின் கணவர் செல்வம் 45, அவரது உறவினர்கள் வேலு 63, பால்பாண்டி 52, ஆகியோர் கத்தியால் பழனிவேல்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த பழனிவேல்ராஜ் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவரது புகாரில் செல்வம், வேலு, பால்பாண்டி ஆகியோரை பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்
மூணாறு: சந்தேகத்தின் பெயரில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தொடுபுழா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இடுக்கி மாவட்டம், பூப்பாறை அருகே முரிக்கும்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் பைஜூ 48. இவரது மனைவி அஜிமோள். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை விட்டு பிரிந்த அஜிமோள், அடிமாலியில் பெற்றோருடன் வசித்தார். அவருக்கு வேறொருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக பைஜூக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் 2016 டிச.24ல் அடிமாலிக்கு சென்ற பைஜூ, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட என மனைவியை அழைத்து சென்று டிச.26ல் கொலை செய்தார். சாந்தம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அடிமாலி போலீஸ் ஸ்டேஷனில் பைஜூ சரணடைந்தார். இந்த வழக்கு தொடுபுழா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லைஜா மோள்ஷெரீப், பைஜூக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப் பளித்தார்.
ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் மீது வழக்கு
தேனி: கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் நா.த.க.,வினர் அரசு பஸ்களில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்ட் நிலைய பொருப்பாளர் பாண்டியராஜன் புகாரில், நா.த.க., தொகுதி செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட 15 பேர் மீது தேனி போலீசார் வழக்கு பதிந்தனர்.
பெண் தொழிலாளி காயம்
தேனி: பழனிசெட்டிபட்டி ராமுத்தாய் 55, தனியார் மில்லில் தொழிலாளியாக உள்ளார். சில தினங்களுக்கு முன் பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன் தெரு அருகே ரோட்டை கடந்தார். அப்போது கார் மோதி காயமடைந்தார். அவரது மகள் மங்கையர்கரசி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல் மூவர் மீது வழக்கு
போடி: மதுரை சர்வேயர் காலனியில் வசிப்பவர் வெற்றிவேல் 60. போடிமெட்டு அருகே மணப்பட்டியில் ஏலத்தோட்டம் உள்ளது. இவருக்கும் மணப்பட்டியை சேர்ந்த போதுமணி என்பவருக்கும் வரப்பு தகராறு இருந்துள்ளது. வெற்றிவேல் தனது நில தோட்டத்திற்கு வேலி அமைத்து உள்ளார். இந்நிலையில் போதுமணி, சரவணன், ரகுநாதன் மூவரும் அத்துமீறி நுழைந்து வேலியை சேதப்படுத்தி, கொலை செய்து விடுவதாக வெற்றிவேல் குரங்கணி போலீசில் புகார் அளித்தார். போதுமணி, சரவணன் உட்பட மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தூக்கிட்டு தற்கொலை
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான லெட்சுமி எஸ்டேட், வெஸ்ட் டிவிஷனைச் சேர்ந்தவர் வர்க்கீஸ் 60. இவர், லெட்சுமி பால் கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நிலையில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சமீபத்தில் கால் விரல்கள் அகற்றப்பட்டன. அதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் வீட்டின் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
தாய், மகன் கடத்தல்: ஒருவர் கைது
தேனி: தேனி அருகே கோடாங்கிபட்டி சாய்பாபா நகர் மனோகரன், வியாபாரி.பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இவரது மனைவி மல்லிகா 53, மகன் துர்கேஷ் இருவரையும் துாத்துக்குடியை சேர்ந்த ராஜபாண்டி தலைமையிலான கும்பல் காரில் கடத்தி சென்று, திருமங்கலத்தில் இருவரையும் இறக்கி விட்டனர். மல்லிகா புகாரில் ராஜபாண்டி உள்ளிட்ட 6 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பாண்டியராஜா 46, என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

