/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு புலிகள் காப்பக 75ம் ஆண்டு துவக்க விழா தமிழகப்பகுதியில் ஜீப் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு
/
பெரியாறு புலிகள் காப்பக 75ம் ஆண்டு துவக்க விழா தமிழகப்பகுதியில் ஜீப் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு
பெரியாறு புலிகள் காப்பக 75ம் ஆண்டு துவக்க விழா தமிழகப்பகுதியில் ஜீப் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு
பெரியாறு புலிகள் காப்பக 75ம் ஆண்டு துவக்க விழா தமிழகப்பகுதியில் ஜீப் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு
ADDED : செப் 22, 2025 03:50 AM

கூடலுார்:பெரியாறு புலிகள் காப்பகத்தின் 75ம் ஆண்டு துவக்க விழாவைத்தொடர்ந்து தமிழகப் பகுதியில் ஜீப் ஊர்வலத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குமுளி, கூடலுார், கம்பத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். லோயர்கேம்பில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பெரியாறு புலிகள் சரணாலயம் 1950ல் துவக்கப்பட்டு 1978ல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதன் 75ம் ஆண்டு துவக்க விழா கேரள மாநிலம் பம்பையில் நடந்தது. இதனையடுத்து ஜீப் ஊர்வலத்தை சரணாலய துணை இயக்குநர் சந்தீப் துவக்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் அழுதா வனப்பகுதியில் உள்ள குருத்தோடு, குட்டிக்கானம், பாம்பனாறு, சத்திரம், வள்ளக்கடவு வழியாக தேக்கடி வந்தது. தேக்கடி துணை இயக்குநர் ஷாஜி தலைமையில் சரணாலயத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன.
அதன்பின் தேக்கடியில் இருந்து லோயர்கேம்ப், கூடலுார், கம்பம், சின்னமனுார், ஹைவேவிஸ் வழியாக மேல்மணலாருக்கு ஊர்வலம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஊர்வலம் தமிழகப்பகுதியில் வருவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், குமுளியில் டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். லோயர்கேம்ப் காஞ்சிமரத்துறையில் உள்ள விடியல் வனக்குழு அலுவலகத்தில் தேக்கடி ரேஞ்சர் சிபி தலைமையில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
ஐந்து மாவட்ட விவசாய சங்க செயலாளர் ரஞ்சித், துணைத்தலைவர் ராஜீவ் தலைமையிலான விவசாயிகள் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலுார் பஸ் ஸ்டாண்ட்டில் குவிந்தனர். ஆனால் ஜீப் ஊர்வலம் பைபாஸ் ரோடு வழியாக கடந்து சென்றது. பெரியாறு புலிகள் சரணாலயத்திற்குள் தமிழக அரசு வாகனங்கள் செல்ல பல கெடுபிடிகளை விதிக்கும் நிலையில் தமிழகப் பகுதியில் நடக்கும் ஜீப் ஊர்வலத்திற்கு தமிழக போலீசாரும், தனிப்பிரிவு போலீசாரும் உதவுவதை கண்டிக்கின்றோம் என, விவசாயிகள் கோஷமிட்டனர்.
கம்பத்தில் ஆர்ப்பாட்டம் கம்பம் பைபாஸ் ரோட்டில் நகர் நுழைவு வாயிலில் விவசாயிகள் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் வாகனங்களை மறிக்க தயாராகினர். போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் ஜீப் ஊர்வலம் நிற்காமல் சென்றது.
ரேஞ்சர் திருமுருகன் கூறியதாவது: ஜீப் ஊர்வலத்திற்காக கேரள வனத்துறையினர், தேனி கலெக்டர், தமிழக தலைமை வனப் பாதுகாவலரின் முன் அனுமதி பெற்றுள்ளனர். மேல் மணலாறில் உள்ள 'ஷெட்'டில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகின்றனர், என்றார்.