/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை ரூ.9.15 கோடி வழங்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தகவல்
/
மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை ரூ.9.15 கோடி வழங்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை ரூ.9.15 கோடி வழங்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை ரூ.9.15 கோடி வழங்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தகவல்
ADDED : செப் 20, 2024 06:37 AM

தேனி : தேனி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதற்காக உதவித்தொகை ரூ. 9.15 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள், பராமரிப்பதற்கான உதவித்தொகை, அவர்களுக்கான உதவி உபகரணங்கள், வேலை வாய்ப்பிற்கு உதவுதல், தேவைப்படுவோருக்கு வேலை வாய்ப்பிற்கான பயிற்சி என பல்வேறு வகையில் உதவி மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுவாழ்வு ஏற்படுத்தும் நோக்கில் இத் துறை செயல்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், உதவிகள் குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பணி என்ன
மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உரிய மருத்துவம், அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தல், தனித்துவ அடையாள அட்டை கிடைப்பதை உறுதி செய்தல், நலவாரியத்தில் சேர்த்து, உதவிகளை கிடைக்க செய்தல், பராமரிப்பு உதவித்தொகை வங்கி கணக்கிற்கு செல்வதை உறுதி செய்வது, இத் துறையின் முக்கிய பணி ஆகும்.
எத்தனை பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர்
மாநில அரசின் உதவிகள் வழங்கும் அட்டை 23,390 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ சான்றிதழ், ஆதார், புகைப்படம் இவற்றை வைத்து தனித்துவ அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தனித்துவ தேசிய அடையாள அட்டை 19,092 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை பெறும் பயனாளிகள் எவ்வளவு பேர்
மாவட்டத்தில் 3816 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.2ஆயிரம் பராமரிப்புத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத் தொகை பெற ஊனம் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டவர்கள், தசைசிதைவு நோய், தொழுநோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.9கோடியே 15லட்சத்து 84 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை, கல்வி, திருமண உதவித்தொகை, கடன் திட்டம், தனித்துவ அடையாள அட்டை இவற்றில் பயன்பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் மாவட்ட அலுவலகத்தை அணுகலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், பெட்ரோல் மூலம் இயங்கும் கூடுதல் சக்கரம் பொருத்திய டூவீலர்கள், பேட்டரி சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, பார்வையற்றோர், காதுகேளாதோர் பயன்படுத்தும் அலைபேசி, கடிகாரம், மடக்கும் வகை ஊன்றுகோல் உள்ளிட்டவை 894 பேருக்கு ரூ.1.75 கோடி மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பு பள்ளிகள் சிறப்பு இல்லங்கள் எத்தனை
மாவட்டத்தில் மாற்றுத்தின் கொண்ட, அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக 14 சிறப்பு பள்ளிகள் செயல்படுகிறது. இங்கு 400 மாணவர்களுக்கு சிறப்பு கல்வி, விளையாட்டு, பிஸியோ தெரபி பயிற்சி, தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. கலெக்டர் உத்தரவில் அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து மதிய உணவு வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் மாணவர்கள் ஒயர் கூடை பின்னுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.தேவாரம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்காக இரு இல்லங்கள் செயல்படுகிறது. அங்கு 14 வயதிற்கு மேற்பட்டோருக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதனுடன் மருத்துவ வசதி, உணவு, தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு 80 பேர் தொழிற்பயிற்சி பெறுகின்றனர். ஆண்டிபட்டி, வடபுதுபட்டியில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக இல்லங்கள் உள்ளன. இங்கு தலா 50 பேர் உள்ளனர். சிறப்பு பள்ளிகள், இல்லங்களில் மாதந்தோறும் ஆய்வுகள் செய்யப்படுகிறது.
வட்டார அளவில் அலுவலகம் உள்ளதா
மாநில அரசின் 'ரைட்ஸ்' திட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் சமூக பராமரிப்பு மையம் துவங்கப்பட உள்ளது. அதற்கான இடத்தேர்வு கலெக்டர் தலைமையில் நடந்து வருகிறது. இம்மையங்கள் திறக்கப்பட்டால், அவை ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்படும். இம்மையத்தில் பிஸியோ தெரபி, சிறப்பு ஆசிரியர், பேச்சு பயிற்சியாளர், மனநல ஆலோசகர் உள்ளிட்டோர் பணியில் இருப்பார்கள். அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.
திருமண உதவித்தொகை உண்டா
துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் திருமண உதவித்தொகையாக ரூ. 25ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இது முதல் திருமணம் செய்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். கடந்த ஆண்டில் 12 பேருக்கு ரூ. 4.75 லட்சம் பணம், 56 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் பற்றி மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் 10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக சேர முடியும். 18,971 பேர் வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு இயற்கை மரணம், விபத்து மரணம், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்தாண்டு இயற்கை மரண நிதியாக 56 பேருக்கு தலா 17 ஆயிரம் வீதம் 9.52 லட்சம், விபத்து மரணத்திற்கு 6 லட்சம், குழந்தைகளின் கல்விஉதவித்தொகையாக 44 பேருக்கு ரூ. 1.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர தொழில் துவங்க வங்கிகடன் 42 பேருக்கு ரூ.7.21 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. தொழில் துவங்க என்ன வகையான உதவி கிடைக்கும்
மாவட்ட தொழில் மையம் மூலம் தொழிற்பயிற்சி பெற்று கடன் பெற துறை மூலம் உதவி செய்யப்படுகிறது. தொழில் மையம் மூலம் வாங்கும் கடன் தொகையில் 5 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செலுத்துகிறது. கடந்தாண்டு இருவருக்கு ஆவின் பாலகம் அமைத்து தரப்பட்டுள்ளது. சுயதொழில் துவங்கவும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
இடைத்தரகர்கள் இடையூறு உள்ளதே
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள், உபகரணங்கள் பெற யாருக்கும் பொருளோ, பணமோ வழங்க தேவையில்லை. யாரேனும் பணம் கேட்டால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நேரடியாக அல்லது 04546- 252085 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். என்றார்