UPDATED : ஜூன் 02, 2026 04:18 PM
ADDED : ஜூன் 02, 2026 04:10 PM
ஆண்டிபட்டி;ஆண்டிபட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களில் பெய்த கோடை மழை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலால் பலரும் அவதிப்பட்டு வந்தனர். கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் பயன்பாடும் அதிகரித்தது. நீர்வரத்து இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 20 அடி வரை குறைந்தது. வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களுக்கும் தண்ணீர் விநியோகம் உள்ளது. குடிநீர் தேவைக்காக பிக்கப் அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீரும் குறைந்ததால் குடிநீருக்கு பம்ப் செய்ய முடியாமல் கூட்டு குடிநீர் திட்டங்கள் முடங்கி உள்ளன. குடிநீர் வினியோகம் பாதித்ததால் பலரும் நிலத்தடி நீரையும், விலைக்கு வாங்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் ஆண்டிபட்டி பகுதியில் பெய்த கோடை மழையில் கிடைத்த நீரை சேகரித்து இருப்பில் வைத்து பலரும் குடிநீராக பயன்படுத்துகின்றனர். சுத்தமான மழை நீர் சுவையுடன் இருப்பதால் பலரும் இருப்பில் வைத்து குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
