/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
யானைகள் பலியாவதை தடுக்க சிறப்பு திட்டம்
/
யானைகள் பலியாவதை தடுக்க சிறப்பு திட்டம்
ADDED : ஆக 11, 2025 02:33 AM
கம்பம்:யானைகள் பலியாவதை தடுக்க சிறப்பு திட்டம் வகுத்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக மாநில வனத்துறையினர் தெரிவித்தனர்.
யானைகள் கணக்கெடுப்பு 2025 ஒரே நேரத்தில் தென் மாநிலங்களில் நடந்தது. முடிவுகள் வெளியாகாத நிலையில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2023 கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 2961 யானைகள் இருந்தன. 2024ல் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்தது.
கடந்த 2015 முதல் 2023 வரை 8 ஆண்டுகளில் கேரளாவில் மட்டும் 845 யானைகள் இறந்துள்ளன. இது தவிர அசாம், ஒடிசா மாநிலங்களில் ரயில் விபத்து, தமிழகம், ஒடிசா, மேகாலயா மாநிலங்களில் வேட்டை, மின்சாரம் பாய்ந்து பலியாவது என, யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
யானைகள் கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவில் பலியாவதற்கு முக்கிய காரணம் ஒரு வைரஸ் (EEHV HD) தாக்குவதால் என தெரிய வந்தது. உடன் இருக்கும் குட்டிகளையும் வைரஸ் பாதிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
குட்டிகள் தங்களது குடும்பமாக உள்ள யானை கூட்டங்களுடன் இருந்தால் இந்த வைரஸ் தாக்க வாய்ப்புக்கள் குறைவு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதுதவிர, வனப்பகுதிக்குள் யானைகள் வாழ்விடங்கள் சுருங்குவது, சீதோஷ்ண நிலை மாற்றம், குறிப்பாக அதிக வெப்பம், ஒரு சில தாவரங்களால் யானைகளின் தீவனம் குறைவது, மனிதர்களின் நடவடிக்கை என பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றை தவிர்த்து யானைகள் இறப்பை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க மாநில வனத்துறை அதிகாரிகளுக்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யானைகள் இறப்பு தணிக்கை அமைப்பு (Tamil Nadu Elephant death Audit Frame work) ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் பலியாவதை தடுக்க சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் யானைகள் விபத்து, லெவல் கிராசிங், மின்சாரம் போன்ற காரணங்களால் இறப்பது முழுமையாக தடுக்கப்படும்,' என்றனர்.