/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேலை நிறுத்த போராட்டம் இடுக்கியில் இயல்பு நிலை பாதிப்பு
/
வேலை நிறுத்த போராட்டம் இடுக்கியில் இயல்பு நிலை பாதிப்பு
வேலை நிறுத்த போராட்டம் இடுக்கியில் இயல்பு நிலை பாதிப்பு
வேலை நிறுத்த போராட்டம் இடுக்கியில் இயல்பு நிலை பாதிப்பு
ADDED : ஜூலை 10, 2025 03:29 AM

மூணாறு: மத்திய அரசை கண்டித்து  எதிர் கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தால் இடுக்கியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொழில் குறியீட்டை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
அந்த போராட்டம் இடுக்கி மாவட்டத்தில்'பந்த்' போன்ற சூழலை ஏற்படுத்தியது. கடைகள், ஓட்டல்கள் உட்பட வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அரசு, தனியார் பஸ்கள் ஓடவில்லை. சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டன. தேயிலை, ஏலம் ஆகிய தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால் தோட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது.
பரிதவிப்பு:  மூணாறில் கடைகள், ஓட்டல்கள் ஆகியவை மூடப்பட்டு நகர் வெறிச்சோடியது.   சுற்றுலா பயணிகள் வாகனங்கள், தனியார் வாகனங்கள் ஓடின. இரவிகுளம் தேசிய பூங்கா, தாவரவியல், ஹைடல் ஆகிய  பூங்காக்கள் உட்பட  சுற்றுலா பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டதால் ஏமாற்றத்துடனும்,
உணவு கிடைக்காமலும் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர்.
தனித்து போராட்டம்: கேரளாவில் வரும் உள்ளாட்சி, சட்டசபை ஆகிய தேர்தல்களை கருத்தில் கொண்டும், மத்திய அரசை மட்டும் இன்றி மாநில அரசை கண்டித்தும் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மாநிலம் முழுவதும் தனித்து போராட்டம் நடத்தினர். மூணாறில் இடது சாரி கூட்டணி கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்காததால்  சி.ஐ.டி.யு.வினர் தனித்து போராட்டம் நடத்தினர்.
தடுத்து நிறுத்தம்: அவர்கள்  நகரில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை தடுத்து நிறுத்தி சிறிது நேரத்துக்கு பிறகு செல்ல அனுமதித்த வண்ணம் இருந்தனர்.
எச்சரிக்கை: தமிழகம் திருச்சியில் இருந்து தி.மு.க. கொடி கட்டிய காரில் சுற்றுலா வந்தவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தி விமர்சித்ததுடன் தி.மு.க. கொடியை கழற்றி விட்டு செல்லுமாறு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

