/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குறைந்த நீரில் கூடுதல் மின் உற்பத்தி செய்யும் சுருளியாறு மின் நிலையம் - கோடையிலும் 35 மெகாவாட் உற்பத்திக்கு உறுதி
/
குறைந்த நீரில் கூடுதல் மின் உற்பத்தி செய்யும் சுருளியாறு மின் நிலையம் - கோடையிலும் 35 மெகாவாட் உற்பத்திக்கு உறுதி
குறைந்த நீரில் கூடுதல் மின் உற்பத்தி செய்யும் சுருளியாறு மின் நிலையம் - கோடையிலும் 35 மெகாவாட் உற்பத்திக்கு உறுதி
குறைந்த நீரில் கூடுதல் மின் உற்பத்தி செய்யும் சுருளியாறு மின் நிலையம் - கோடையிலும் 35 மெகாவாட் உற்பத்திக்கு உறுதி
ADDED : பிப் 13, 2025 05:46 AM
கம்பம்: குறைந்த நீரில் கூடுதல் மின் உற்பத்தி செய்யும் சுருளியாறு மின் உற்பத்தி நிலையம் என சிறப்பு பெற்றுள்ளது.
தேனி மாவட்டம், லோயர்கேம்பில் உள்ள பெரியாறு நீர் மின் நிலையம், வண்ணாத்திபாறை யில் சுருளியாறு நீர் மின் நிலையம் உள்ளது. லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையம் 1958ல் முதல்வர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு எடுக்கும் தண்ணீரை பயன்படுத்தி 4 ஜெனரேட்டர்கள் மூலம் 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. சமீபத்தில் 4 ஜெனரேட்டர்களின் திறனை உயர்த்தி, தற்போது 168 மெகாவாட் உற்பத்தி நடைபெறுகிறது.
சுருளியாறு நீர் மின் நிலையம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் கடந்த 1978 ல் துவக்கி வைக்கப்பட்டது.
இரவங்கலாறு அணையில் இருந்து 971 மீட்டர் உயரத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீரை இறக்கி 35 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.
400 கன அடிநீரில் நீர்மின் உற்பத்தி
பெரியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தி செய்ய குறைந்தது 400 கன அடி தண்ணீரை இறக்க வேண்டும். ஆனால் சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தி செய்ய 141 கன அடி தண்ணீர் போதுமானது.
காரணம் சுருளியாறு மின் நிலையத்தில் 971 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் இறக்கப்படுகிறது. ஆனால் பெரியாறு மின் நிலையத்தில் 373 மீட்டரில் இருந்து தான் தண்ணீர் இறக்கப்படுகிறது . உயரம் அதிகரிக்க அதிகரிக்க குறைவான தண்ணீரில் கூடுதல் மின்சாரம் தயாரிக்க முடியும் என்கின்றனர்.
பெரியாறு மின் நிலையம் பொதுப்பணித் துறையை நம்பியே உள்ளது. மின் நிலையம் மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பாசனத்திற்கான தண்ணீர் எடுக்கும் அதிகாரம் பொதுப்பணித்துறையிடம் தான் உள்ளது . எனவே பொதுப்பணித்துறை தண்ணீரை விடுவிக்கும் போது தான், அதற்கேற்ப வாரியத்தால் மின் உற்பத்தி செய்ய முடியும்.
தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி
ஆனால் சுருளியாறு மின் நிலையம் மின்வாரியத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. எப்போதெல்லாம் மின்சாரம் தேவையோ, அப்போதெல்லாம் அணையில் இருந்து தண்ணீரை எடுத்து மின் உற்பத்தி செய்ய முடியும். ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு இரவங்கலாறு அணைகளும் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது . ஆண்டு முழுவதும் குறிப்பாக கோடை காலத்தில் பீக் அவர்சில் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையம் என்ற பெருமையையும் சுருளியாறு பெற்றுள்ளது. எனவே சுருளியாறு மின்நிலையத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள மின் நிலையங்களில்இதுவும் ஒன்றாகும்.