ADDED : ஆக 10, 2025 01:31 AM

ஆண்டிபட்டி:வைகை அணை நீர்மட்டம் முழு அளவை எட்டி வரும் நிலையில் பிரதான மதகுகளை இயக்கி தண்ணீரை வெளியேற்றி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரியாறு அணை நீர்வரத்தால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து நேற்று காலை 69.75 அடியானது. அணை மொத்த உயரம் 71 அடி. வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததும் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது நீர்வரத்து குறைவாக உள்ளதால் 71 அடி வரை நீரை தேக்க நீர்வளத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் நீர்வரத்து, நீர்மட்டம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று மதுரை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், செயற்பொறியாளர் சிவ பிரபாகர், வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன், உதவி பொறியாளர் பரதன், ராஜாங்கம் மற்றும் அலுவலர்கள் அணையின் பிரதான மதகுகளை இயக்கி நீரை வெளியேற்றி சோதனை மேற் கொண்டனர்.
நீர்வரத்து உயரும் பட்சத்தில் எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் 5 மாவட்டங்களைச் சேர்ந்த கரையோர பொது மக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.