/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
/
வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
ADDED : அக் 16, 2024 02:10 AM
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.
பெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு செப். 15ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கும் ஜூலை 3ல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நேற்று முன்தினம் இரவு முதல் நிறுத்தப்பட்டது.
நீர்வளத் துறையினர் கூறியதாவது:
கடந்த சில நாட்களாகதேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து வினாடிக்கு 2030 கன அடி வீதம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு கடந்த மூன்று நாட்களில் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 9:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி -சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 55.54 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1188 கனஅடி. அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழைக்கான சூழல் தொடர்கிறது. அணையில் நீர் திறப்பு இல்லாததால் நீர்மட்டம் விரைந்து உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.