ADDED : நவ 07, 2025 11:48 PM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் ஆறு நாட்களுக்குப் பின் நேற்று நிறுத்தப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் அக்.,27ல் 70.24 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக அக்.,27 முதல் 31 வரை 624 மில்லியன் கன அடி திறந்து விடப்பட்டது. சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக நவ.,2ல் திறக்கப்பட்ட நீர் நேற்று நிறுத்தப்பட்டது. கடந்த ஆறு நாட்களில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு 772 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 67.91 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 115 கன அடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீரும் வெளியேறுகிறது.

