/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
/
பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
ADDED : நவ 26, 2025 03:58 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் தேன் சுட பெண்கள் இயக்கம் சார்பில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் தங்களுக்கு ஒதுக்கிய இடத்தில் வாடகை வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்ததால் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று ஆண்டிபட்டியில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டிபட்டி மெயின் ரோடு வழியாக ஊர்வலத்தை முடித்து டாக்சி ஸ்டான்ட் அருகே ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நிழற்பந்தலில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒன்று கூடினர்.
நிழற்பந்தலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடகை வாகனத்தை அப்புறப்படுத்த பெண்கள் வலியுறுத்தினர். வாகன உரிமையாளர் வெளியூரில் இருந்ததால் வாகனம் அப்புறப்படுத்தவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்கனவே முன் அனுமதி பெற்றிருந்தும், ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்வதாகவும், அப்புறப்படுத்தாத போலீசாரை கண்டித்தும் பெண்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பந்தலில் நிறுத்தியிருந்த வாகனத்தை போலீசார் உதவியுடன் அப்பகுதியில் இருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்ட பெண்கள் அமைப்பினர் திட்டமிட்டபடி தங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

