/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
விரும்பிய மொழியை படிக்கும் சுதந்திரம் தமிழகத்தில் இல்லை கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை
/
விரும்பிய மொழியை படிக்கும் சுதந்திரம் தமிழகத்தில் இல்லை கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை
விரும்பிய மொழியை படிக்கும் சுதந்திரம் தமிழகத்தில் இல்லை கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை
விரும்பிய மொழியை படிக்கும் சுதந்திரம் தமிழகத்தில் இல்லை கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை
ADDED : மார் 01, 2025 02:57 AM

திருநெல்வேலி: ''விரும்பிய மொழிகளை படிக்கும் சுதந்திரம் தமிழக மாணவர்களுக்கு இல்லை,'' என, திருநெல்வேலி அருகே செங்குளத்தில் அகில உலக அய்யாபதிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார்.
விழாவிற்கு தலைமை வகித்த கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 'ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள்' என்ற நூலை வெளியிட்டார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சிறந்த அய்யாவழி ஆளுமைகளுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார்.
பின் அவர் பேசியதாவது: ஆங்கிலேயர்கள் நம் சனாதன தர்மத்தை, பண்பாட்டை சிதைக்க முற்பட்டனர். அப்போது தான் மகாவிஷ்ணு வைகுண்டராக பிறப்பெடுத்தார். பாரதத்தையும், சனாதன தர்மத்தையும் பிரிக்க முடியாது. சனாதனத்தால் உருவாக்கப்பட்டது தான் பாரதம். தமிழ் மண் புண்ணிய பூமி. இது பாரதத்தின் ஆன்மிக, சனாதன தர்மத்தின் தலைநகராக விளங்குகிறது.
பாரதத்தில் வெவ்வேறு மொழி பேசுபவர்கள், வெவ்வேறு இனத்தினர், உடை உணவு கலாசாரங்களால் வேறுபட்டவர்களாக வாழ்ந்தாலும் நாம் அனைவரும் சனாதன குடும்பத்தினர் தான். சனாதன தர்மத்தில் வேறுபாடுகள் இல்லை. அதைத்தான் அய்யா வைகுண்டர் போதித்தார்.
உலகிற்கு உதவும் வல்லமை பெற்ற நாடாக பாரதம் வளர்ந்து இருக்கிறது. கொரோனா தொற்று காலத்தில் 150 நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி அவர்களுடைய துயரத்தில் பங்கெடுத்தது பாரதம். உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய மதிப்புமிக்க நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் மிகப்பெரிய சனாதனியான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் பிரதமர் மோடி யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை. தமிழகத்திற்கும் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களை வழங்கியுள்ளார். சமீபத்தில் டில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். தமிழகத்தில் ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், பண்பாட்டிற்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் தருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நடக்கிறது. தமிழகத்திற்கும் காசிக்கும் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர்பு உள்ளது. கடந்த 45 நாட்களாக பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 66 கோடி பேர் புனித நீராடினர்.
கும்பமேளாவில் பல்வேறு பிராந்தியங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற போதிலும், யாரும் ஒருவருக்கொருவர் நீங்கள் எந்த பகுதி, எந்த மொழி என கேட்டுக்கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாகத்தான் ஒன்றிணைந்து நீராடினர். சனாதனத்தின் மெய்யான உணர்வு அதில் பிரதிபலித்தது. இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் உள்ள சில சக்திகள் சனாதனத்தின் வளர்ச்சியையும், இந்தியாவின் வளர்ச்சியையும் விரும்ப வில்லை. பிரிவினைகளை ஏற்படுத்தி சனாதன தர்மத்தை அழிக்கப் பார்க்கிறார்கள். ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் நம்மை பிரித்து ஆண்டார்கள். தற்போதும் சில சக்திகள், சித்தாந்தவாதிகள், பாரதத்தையும், சனாதன தர்மத்தையும் அழிக்க முயற்சிக்கிறார்கள். சனாதனத்தை அழிக்க முடியாது.
மொழியை திணிக்கிறார்கள் என்ற பொய்யையும் புரட்டையும் கட்டவிழ்த்து விடுகிறார்கள். மற்ற மாநில மாணவர்களைப்போல விரும்பிய மொழிகளைத் தேர்வு செய்து படிக்கும் சுதந்திரம் தமிழக மாணவர்களுக்கு இல்லை. மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இது நமது இளைஞர்களுக்கும் அவர்களுடைய எதிர்காலத்திற்கும் நல்லதல்ல.
தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பிரதமர் மோடி உலகம் முழுவதும் எடுத்து சென்றுள்ளார். அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி, அய்யா வைகுண்டர் வழியை பின்பற்றுகிறார். இந்த நாடும் சமூகமும் அய்யா வழியை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் சமூக நீதி பேசத் தேவையில்லை.இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். ஏற்பாடுகளை அய்யாபதிகள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ராமலிங்கம் செய்தார்.
ஐரோப்பிய கலாசாரத்தை திணித்தனர்
திருநெல்வேலியில் மதன் மோகன் மாளவியா வித்யா கேந்திரத்தின் 33வது ஆண்டு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது அவர்கள் நம் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அழிக்க முயன்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தேசபக்தி அர்ப்பணிப்பு உணர்வை மக்களிடம் வளர்த்தது. நம் அடையாளம், கலாசாரம் இன்னும் நிலைத்திருக்க ஆர்.எஸ்.எஸ்., பெரும் பங்காற்றியது. ஆங்கிலேயர் பாரதிய கல்வி முறையை அழித்து ஐரோப்பிய கல்வி முறையை திணித்தனர். நாம் அடிமையாக வாழ்ந்தோம். நம் அடையாளங்களை அழித்தனர். இதற்கு எதிராக மதன்மோகன் மாளவியா பாரதிய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பனாரஸ் மத்திய ஹிந்து கல்லூரியை உருவாக்கினார். இந்தியா என்பது ஒரு அரசியல் நாடு. ஆனால் பாரதம் என்பது தொன்மை, நாகரிகம், கலாசாரத்தின் அடையாளம்.
புரட்சிகவிஞர் சுப்பிரமணிய பாரதி 30 கோடி முகமுடையாள் சிந்தனை ஒன்றுடையாள் என்று பாடியுள்ளார். ஆனால் தற்போது இந்த சிந்தனையும் 18 ஆக உடைந்துள்ளது. நாம் ஒருமித்த பாரத சிந்தனையை கொண்டிருக்க வேண்டும் என்றார்.