/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
இருவரை தாக்கிய போலீசார் இழப்பீடு வழங்க உத்தரவு
/
இருவரை தாக்கிய போலீசார் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஏப் 27, 2024 01:39 AM

திருநெல்வேலி:சென்னை சைதாப்பேட்டை குமரன் காலனியில் வசிப்பவர் மாரிமுத்து. இவருக்கும் தென்காசியை சேர்ந்த பேச்சியம்மாளுக்கும் திருமணம் நடந்தது. 2019 ஆக., 28ல் பேச்சியம்மாளுக்கு திருநெல்வேலி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க மாரிமுத்துவும், அவரது அண்ணன் பேச்சி முத்துக்குமாரும் வந்தனர். குழந்தையை பார்ப்பது தொடர்பாக, இரு வீட்டாருக்கும் மருத்துவமனையில் தகராறு நடந்தது.
பெண் வீட்டார் அளித்த புகாரின்படி, மாரிமுத்துவையும், பேச்சி முத்துக்குமாரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர், அப்போது, லத்தியால் இருவரையும் கடுமையாக தாக்கினர். இதுகுறித்து இருவரும் மறுநாள் திருநெல்வேலி மாநகர போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். மனித உரிமை ஆணையம் இரு தரப்பையும் விசாரித்தது.
திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்த விசாரணையின் போது, மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பாதிக்கப்பட்ட மாரிமுத்து 2019ல் சட்டக் கல்லுாரி மாணவர். அவரது சகோதரர் வழக்கறிஞர். இருவருக்கும் தமிழக அரசு தலா 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த தில்லை நாகராஜன், ஏட்டுகள் சண்முகநாதன், பிரேம்குமார், சிறப்பு எஸ்.ஐ., முத்துராமலிங்கம் ஆகியோரிடம் தலா 25,000 ரூபாய் பிடித்தம் செய்து வழங்கவும் உத்தரவிட்டார்.

