/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
26 வகை வெளிநாட்டு பறவைகள் வலசை வருகை கணக்கெடுப்பில் தெரிய வந்தது
/
26 வகை வெளிநாட்டு பறவைகள் வலசை வருகை கணக்கெடுப்பில் தெரிய வந்தது
26 வகை வெளிநாட்டு பறவைகள் வலசை வருகை கணக்கெடுப்பில் தெரிய வந்தது
26 வகை வெளிநாட்டு பறவைகள் வலசை வருகை கணக்கெடுப்பில் தெரிய வந்தது
ADDED : பிப் 02, 2025 01:56 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தாமிரபரணி நீர் பெறும் பாசனக்குளங்களில் 100 சிற்றினங்களைச் சேர்ந்த பறவைகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன. இதில் 26 வகை பறவைகள் வலசை வருபவையாகும்.
தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பை அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து 2011 முதல் மேற்கொண்டு வருகிறது. 15வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு 2025 ஜனவரி 24 முதல் 26 வரை திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பாசனக்குளங்களில் நடந்தது. அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமையில் நெல்லை இயற்கை சங்கம், முத்துநகர் இயற்கை கழகம், எக்கோ ஜெசுயிட்ஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. 68 குளங்களில் கணக்கெடுப்பு நடந்தது. இதில் 71 இனங்களை சேர்ந்த 23,753 பறவைகள் பதிவாகின. உண்ணிக் கொக்கு (3,495), சிறிய நீர்க்காகம் (2,150), தைலான் குருவி (1,511), சிறு அன்றில் (1,185), மற்றும் மீசை ஆலா (967) அடங்கும். வலசை வரும் வாத்தினங்களான ஊசி வால் வாத்து, நீலச்சிறகு வாத்து, தட்டை வாயன், வரித்தலை வாத்து போன்ற பறவைகளும் கணக்கெடுப்பில் பதிவாகின.
தூத்துக்குடி கடம்பகுளம் 3,724 பறவைகள் மற்றும் 37 இனங்களுடன் மிக அதிக எண்ணிக்கையைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து பேரூர் (1,505 பறவைகள், 30 இனங்கள்) மற்றும் வெள்ளூர் (1,300 பறவைகள், 38 இனங்கள்) ஆகியவை பெற்றிருந்தன. திருநெல்வேலி கங்கைகொண்டான் குளத்தில் 1,246 பறவைகள் 42 இனங்கள் பதிவாகின. கங்கைகொண்டான் (திருநெல்வேலி), அருந்தவபட்டி மற்றும் மேலப்பாவூர் (தென்காசி) ஆகிய குளங்களில் கருந்தலை அன்றில், நீர்க்காகம், சாம்பல் நாரை, பாம்புத்தாரா இனப் பறவைகள் இனப்பெருக்கம் செய்ததும் பதிவாகியது. திருநெல்வேலி மாவட்டம் வேய்ந்தான்குளத்தில் புள்ளிமூக்குத் தாரா குஞ்சுகளுடன் காணப்பட்டது.
தென்காசி மாவட்டம் வாகைகுளத்தில் பறவைகள் இனப்பெருக்கம் செய்யாதது கவலையை ஏற்படுத்தியது. நூற்றுக் கணக்கான கருந்தலை அன்றில், வக்கா, சாம்பல் நாரை, நீர்க்காம் போன்ற பறவைகள் இக்குளத்தில் பல ஆண்டுகளாக இனப்பெருக்கம் செய்து வந்தன. நீர்நிலைகளில் குப்பை கொட்டுதல் மற்றும் மீன்பிடி வலைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களையும் கணக்கெடுப்பில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்தனர். ஒரு கூழைக்கிடா பறவையின் அலகில் பிளாஸ்டிக் பை சிக்கி அலகை திறக்க முடியாமல் இருந்தது. பல நீர்க்காகங்கள் மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழந்ததையும் காண முடிந்தது. சைபீரியாவிலிருந்து வரும் கருவால்மூக்கன் (பிளாக்டெயில் காட்விட்) உள்ளிட்ட 26 வகையான ஐரோப்பிய பறவைகள் வலசை வந்துள்ளன.
பறவை ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த நீர்நிலைகளை மாசுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்பிலிருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் தேவை. நீர்நிலைகளில் மீன்பிடி மேற்கொள்ளும் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். கழிவு கொட்டுவதை தடுக்க உறுதியாக செயல்பட வேண்டும் என்றனர்.