/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அமித்ஷா ஆக.,22 திருநெல்வேலி வருகிறார்
/
அமித்ஷா ஆக.,22 திருநெல்வேலி வருகிறார்
ADDED : ஆக 20, 2025 03:02 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஆக., 22 நடக்கும் பா.ஜ., பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை பா.ஜ., நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு 5 லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கி பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் மாநாட்டை நடத்த பா.ஜ., மாநில தலைமை திட்டமிட்டுள்ளது. முதல் தென்மண்டல மாநாடு ஆக., 22 மதியம் 3:00 மணிக்கு திருநெல்வேலியில் நடக்கிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் தொகுதிகளுக்குட்பட்ட 28 சட்டசபைகளிலுள்ள 8,500 பூத்களில் இருந்து ஒரு பூத்துக்கு 13 பேர் வீதம் 80 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
இன்று மறியலில் ஈடுபட பா.ஜ., முடிவு:
திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் நடக்கும் இம்மாநாடு ஏற்பாடுகளுக்கு போலீஸ் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனக் கூறி பா.ஜ.,வினர் இன்று (ஆக., 20) மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மாநாட்டிற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு விட்டது. பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதில் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை கூறியுள்ள நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டோம். இதில் சில நிர்வாகிகள் நாங்கள் வைப்பதை வைப்போம் நீங்கள் வழக்கு போடுங்கள் என பேசினர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது தற்போது சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்றனர். போலீசாருடன் நடந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக பா.ஜ., நிர்வாகிகளும் கூறினர்.
இம்மாநாட்டில் பங்கேற்க கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஆக., 22 மதியம் 2:00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு மதியம் 2:50 மணிக்கு துாத்துக்குடி வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருநெல்வேலி வருகிறார். வண்ணார்பேட்டை தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கார் மூலம் மாநாட்டு பந்தலுக்கு வரும் அமித்ஷா மாநாட்டில் பங்கேற்கிறார். மாலை 5:10 மணிக்கு மாநாட்டை நிறைவு செய்து மீண்டும் ஹெலிகாப்டரில் துாத்துக்குடி செல்கிறார். பின் அங்கிருந்து விமானம் மூலம்டில்லி செல்கிறார்.