/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தீர்மானங்களை நிறைவேற்ற எதிர்ப்பு
/
தீர்மானங்களை நிறைவேற்ற எதிர்ப்பு
ADDED : ஜன 31, 2024 02:09 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் சர்ச்சைக்குரிய தீர்மானங்களை நிறைவேற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இம்மாநகராட்சியில் மேயராக சரவணன், துணைமேயராக ராஜு உள்ளனர். தி.மு.க., மேயர் சரவணனை பதவி நீக்கம் செய்யக்கோரி அக்கட்சி கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால் கடந்த மூன்று மாதங்களாக கூட்டம் முறையாக நடக்கவில்லை.
இம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க., மேலிடம் கேட்டுக் கொண்டதால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கவுன்சிலர்கள் கைவிட்டனர். அதன் பிறகு மாநகராட்சி கூட்டம் நேற்று மாலை நடந்தது.
எதிர்ப்பு
மேயர், துணை மேயர் மற்றும் கமிஷனர் தாக்கரே தலைமை வகித்தனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மேயர் வழக்கம் போல கூட்டம் துவங்கியதும் 1 முதல் 28 வரை தீர்மானங்கள் நிறைவேறியது என அறிவிக்க முயன்றார். அதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் வார்டு வாரியாக குறைகளை தெரிவித்த பிறகு கடைசியில் ஒவ்வொரு தீர்மானத்தையும் வாசித்து நிறைவேற்றினால் போதுமானது. மேலும் நில ஆர்ஜிதம் தொடர்பான சில சர்ச்சைக்குரிய தீர்மானங்கள் உள்ளதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து மண்டல வாரியாக குறைகளை கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மாலை 5:00 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு 9:30 மணியை கடந்தும் நடந்தது.
துப்புரவு பணியும் மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதி குறைகளை கவுன்சிலர்கள் அட்டைகள், குப்பை, புகைப்படங்களோடு வந்து மேயர், கமிஷனர் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். கமிஷனர் தாக்கரே ஒவ்வொரு கவுன்சிலர்களின் கேள்விக்கும் பதில் அளித்தார். குறைகள் உள்ள பகுதிகளுக்கு நேரடியாக ஆய்வு செய்ய வருவதாகவும் தெரிவித்தார். நான்கு மண்டல தலைவர்கள் மற்றும் இரண்டு கவுன்சிலர்கள் வீதம் மொத்தம் 12 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு கவுன்சிலர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வார்டு தோறும் நடக்க வேண்டிய பணிகளை ஒருங்கிணைத்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர். நகரமைப்பு குழு உள்ளிட்ட மாநகராட்சியின் குழுக்களுக்கு இனி முக்கியத்துவம் தரப்படும் எனவும் கமிஷனர் உறுதியளித்தார்