/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்டத்தில் தெரு நாய் கடிக்கு ஆளானோர்... 18,000 பேர் உள்ளாட்சி அமைப்புகள் உறக்கம், மக்கள் அச்சம்
/
மாவட்டத்தில் தெரு நாய் கடிக்கு ஆளானோர்... 18,000 பேர் உள்ளாட்சி அமைப்புகள் உறக்கம், மக்கள் அச்சம்
மாவட்டத்தில் தெரு நாய் கடிக்கு ஆளானோர்... 18,000 பேர் உள்ளாட்சி அமைப்புகள் உறக்கம், மக்கள் அச்சம்
மாவட்டத்தில் தெரு நாய் கடிக்கு ஆளானோர்... 18,000 பேர் உள்ளாட்சி அமைப்புகள் உறக்கம், மக்கள் அச்சம்
ADDED : மார் 10, 2025 11:50 PM

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டத்தில் தெரு நாய் கடியால், ஓராண்டில், 18,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கருத்தடை செய்து எண்ணிக்கையை குறைக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்காததால், தெருநாய் கடிக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி உட்பட ஆறு நகராட்சிகள், திருமழிசை, பள்ளிப்பட்டு உட்பட ஒன்பது பேரூராட்சிகள், திருவாலங்காடு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உட்பட 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.
இப்பகுதிகளில், ஒரு லட்சத்து 15,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. முந்தைய காலங்களில் தெருநாய்கள் கொல்லப்பட்டன. 'ப்ளு கிராஸ்' மற்றும் விலங்கு ஆர்வலர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
அதற்கு மாறாக, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை செய்யப்படுகிறது. இதற்கான செலவினத்தை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றன.
ஆனாலும், போதிய நிதியில்லாமல், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்வதில்லை. இதனால், இனப்பெருக்கம் அதிகரித்து, தெரு சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.
ஒரு நாய்க்கு கருத்தடை சிகிச்சை செய்ய, 1,650 ரூபாய் வரை உள்ளாட்சி அமைப்பால் செலவிடப்படுகிறது. அதன்படி கணக்கிட்டால், திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய, 18 கோடியே, 97 லட்சத்து, 50,000 ரூபாய் செலவிட வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமே, இவ்வளவு பெரிய தொகை செலவிட வேண்டி உள்ளதால், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கிட்டால், அதற்கான செலவினங்கள் அதிகரிக்கும்.
இந்நிலையில், தெருநாய்கள் கடித்து சிகிச்சைக்கு வருவோர் பட்டியலை பார்த்தால் மிரள வைக்கிறது. கடந்தாண்டு மார்ச் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரை திருவள்ளூர், திருத்தணி பொன்னேரி அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், 18,124 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றனர்.
இதில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம். இதுமட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை.
தெருநாய் கூட்டத்தில் வெறி நாய் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்கள் காணப்படுகின்றன. இவை கடித்தால், 'ரேபிஸ்' பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய் பாதித்தால், உயிரிழப்பு நிச்சயம் என்ற சூழலே தற்போது வரை நீடிக்கிறது.
தெருநாய் பிரச்னை தானே என, அரசு அலட்சியமாக கடந்து செல்லாமல், வெறிநாய் கடித்து 'ரேபிஸ்' நோய் பாதிப்புக்குள்ளாகி, கோவை மாநகரில் மட்டும் கடந்தாண்டில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்றாண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளால் நாய்கடி தொடர்பாக விழிப்புணர்வோ, பிரசாரமோ நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.