/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தி.மு.க., பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சோழவரத்தில் 3 இடங்களில் அராஜகம்
/
தி.மு.க., பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சோழவரத்தில் 3 இடங்களில் அராஜகம்
தி.மு.க., பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சோழவரத்தில் 3 இடங்களில் அராஜகம்
தி.மு.க., பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சோழவரத்தில் 3 இடங்களில் அராஜகம்
ADDED : ஆக 16, 2024 01:44 AM

சோழவரம்,:திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன், 38; சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளர். இவரது மனைவி அபிஷா பிரியவர்ஷினி, 34; சோழவரம் ஊராட்சி துணை தலைவர்.
அபிஷா பிரியவர்ஷினி, காரனோடையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு நேற்று மதியம் சென்றிருந்தார். வீட்டில் ஜெகன் மற்றும் குழந்தைகள்இருந்தனர்.
மதியம் 2:30 மணிக்கு, ஐந்து பேர் கும்பல், ஜெகன் வீட்டின் வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பியது. குண்டு வெடித்து அதிலிருந்த ஆணி, இரும்பு பொருட்கள் ஆங்காங்கே சிதறின. அருகில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில், சோழவரம் அடுத்த சிறுணியம் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ், 37, வீட்டிற்கு, மர்ம கும்பல் ஆயுதங்களுடன் வந்தது.
இதைப்பார்த்த சரண்ராஜ் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டனர். மர்ம நபர்கள் கதவை உடைக்க முயன்றனர். உடைக்க முடியாததால், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர்.
அத்துடன், வீட்டின் முன் நிறுத்தியிருந்த 'இன்னோவா' கார், 'பல்சர்' இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தனர். தொடர்ந்து, வீட்டின் பின்புறம் வழியாக வெளியே வந்த சரண்ராஜின் தம்பி சுந்தரை, கும்பல் வெட்ட முயன்றது. ஆனால், அவர் தப்பி விட்டார்.
இதற்கிடையில், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் செம்புலிவரம் பகுதியில் லாரிகள் நிறுத்துமிடத்தில், மர்ம கும்பல் ஒன்று, அங்குள்ள லாரி ஓட்டுனர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்தது.
அதை தடுக்க முயன்ற சோழவரத்தை சேர்ந்த சிவா, 30, என்பவரை கையில் வெட்டியது. பின், நாட்டு வெடிகுண்டை வீசி தப்பியது.
சோழவரத்தில் அருகருகே மூன்று இடங்களில், ஒரு மணி நேர இடைவெளிக்குள் மூன்று வன்முறை சம்பவங்கள் நடந்ததிருப்பது, அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

