/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
700 விண்ணப்பங்களுக்கு கட்டட அனுமதி
/
700 விண்ணப்பங்களுக்கு கட்டட அனுமதி
ADDED : ஜூன் 22, 2024 11:22 PM
சென்னை ஒற்றை சாளர முறை அறிமுகப்படுத்திய நிலையில் அடுக்குமாடி கட்டட அனுமதி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., தெரிவித்துள்ளது.
சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:
சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணிகளை விரைவுபடுத்த, 2022 மே மாதம் ஒற்றை சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்கள், வரைபடங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிப்பதால், உடனுக்குடன் சரி பார்க்க முடிகிறது. இதனால், கட்டுமான அனுமதி கோப்புகள் விரைந்து பைசல் செய்யப்படுகின்றன.
வழக்கமாக உயரமான அடுக்குமாடி கட்டடங்கள் தொடர்பாக, ஆண்டுக்கு 65 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு, 135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 100 கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
உயரம் குறைந்த அடுக்குமாடி கட்டடங்கள் பிரிவில், 2022ல் 641 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 455 கட்டட அனுமதிகள் வழங்கப்பட்டன. இதுவே, 2023ல் 837 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 605 கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமான திட்ட அனுமதி கோப்புகளை பரிசீலித்து முடிப்பதற்கான கால அவகாசம், 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
வட சென்னை வளர்ச்சி திட்டம்: வட சென்னையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, 1,000 கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகள் அடிப்படையில், 11 துறைகளின் கீழ் திட்டங்களை பரிசீலனை செய்ததில், இத்திட்டத்தின் மதிப்பு 4,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான பணிகளுக்கு நான்கு ஆண்டுகள் கால கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்: சென்னையில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்கு புதிய இடவசதி ஏற்படுத்த, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கரில், 427 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள், 2024 டிச., இறுதிக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.