/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காரணம் சொல்லாமல் ஆர்டர் ரத்து 'அமேசான்' நிறுவனத்திற்கு 'குட்டு'
/
காரணம் சொல்லாமல் ஆர்டர் ரத்து 'அமேசான்' நிறுவனத்திற்கு 'குட்டு'
காரணம் சொல்லாமல் ஆர்டர் ரத்து 'அமேசான்' நிறுவனத்திற்கு 'குட்டு'
காரணம் சொல்லாமல் ஆர்டர் ரத்து 'அமேசான்' நிறுவனத்திற்கு 'குட்டு'
ADDED : செப் 01, 2024 11:14 PM
சென்னை: சென்னை, ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த சையத் ஷுஹைப் மற்றும் சாஹுல் ஹமீது ஆகியோர், சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
'ஆன்லைன்' விற்பனை நிறுவனமான அமேசான், 2022 அக்., மாதத்தில், பல்வேறு சலுகையுடன் பண்டிகை விற்பனை அறிவிப்பை வெளியிட்டது.
அதில், 'ஆகஸ்ட் ஜுவல்லரி பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம், 'மெலோரா' என்ற மாடல் தங்க நாணயத்தை விற்பனைக்கு பட்டியலிட்டது.
பொருளுக்கான தொகையை முன்னரே செலுத்த வேண்டும்; வாங்கிய பொருள் திருப்பி பெறப்படாது என்ற நிபந்தனைகளையும் குறிப்பிட்டிருந்தது.
இரண்டு கிராம் தங்க நாணயத்தை, அக்., 20ல் ஆர்டர் செய்தேன். விற்பனை விலையாக, 10,130 ரூபாய் செலுத்தினேன்.
நவ., 12ல் நாணயம் டெலிவரி செய்யப்படும் என, விற்பனை நிறுவனம் தகவல் அனுப்பியது.
பின், 20 நாட்களுக்கு பின், ஆர்டரை ரத்து செய்வதாக, அமேசான் தரப்பில் இருந்து தகவல் வந்தது; அதற்கான விளக்கமும் அளிக்கவில்லை.
பொருளை வாடிக்கையாளருக்கு வழங்காமல், பலரிடம் இருந்து பெற்ற பணத்தை குறுகிய காலத்துக்கு மற்ற நடவடிக்கைக்கு பயன்படுத்தி விட்டு, வாடிக்கையாளருக்கு திருப்பி வழங்குகின்றனர். இந்த செயல், நியாயமற்ற வணிக நடைமுறை.
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை உடனே அணுக முடியவில்லை. மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ஒரு லட்சமும், சேவை குறைபாடுக்கு 1.50 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
காரணங்களை குறிப்பிடாமல், 20 நாட்களுக்கு பின், ஆர்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த செயல் நியாயமற்ற வணிகம் மற்றும் சேவை குறைபாடு.
மூன்றாம் தரப்பினர், தங்களின் பொருட்களை விற்பனைக்கு பட்டியலிட மட்டுமே, தளத்தை வழங்குகிறோம் என, அமேசான் நிறுவன விளக்கம் ஏற்புடையது அல்ல.
சேவை குறைபாடு, நியாயமற்ற வணிக நடைமுறைக்கு ஒரு லட்சம் ரூபாயும், வழக்கு செலவுக்கு 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்.
இரு மாதங்களுக்குள் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும். இல்லை எனில், 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.