/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உப்பலமடுகு நீர்த்தேக்கத்தில் ஆட்டம் போட்ட இளசுகள்
/
உப்பலமடுகு நீர்த்தேக்கத்தில் ஆட்டம் போட்ட இளசுகள்
ADDED : மே 08, 2024 12:06 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை மாதவரத்தில் இருந்து காளஹஸ்தி செல்லும் பேருந்தில் பயணித்து வரதையாபாளையம் சென்று, அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் உப்பலமடுகு அருவி வன துறை அலுவலகம் செல்லலாம்.
நீர்தேக்க பகுதியில் கடைகள், உணவகங்கள் ஏதும் இல்லாததால், தேவையான குடிநீர் மற்றும் தண்ணீரை நாம் எடுத்து செல்ல வேண்டும்.
நீர்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான குரங்குகள் இருப்பதால், உணவு பொருட்களை எடுத்து செல்லும்போது கவனம் தேவை.
ஆந்திர மாநிலம் தடா அருகேயுள்ள தடா அருவி என்றழைக்கப்படும் உப்பலமடுகு அருவி மற்றும் நீர்தேக்கத்திற்கு செல்ல, சென்னை மாதவரத்தில் இருந்து செங்குன்றம், கும்மிடிப்பூண்டி வழியாக தடா வரையிலான 60 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும்.
அங்கிருந்து ஸ்ரீகாளஹஸ்தி பிரியும் சாலையில், 16கி.மீ. துாரம் உள்ள வரதையாபாளையம் சென்று, இடது புறமாக 12கீ.மீ., துாரம் பயணித்து உப்பலமடுகு வனத்துறை அலுவலகம் செல்ல வேண்டும்.
உப்பலமடுகு செல்ல ஒரு நபருக்கு 50 ரூபாய் கட்டணம், வாகனங்களுக்கு ஏற்றபடி அனுமதி கட்டணம், கேமரா கட்டணம் என வசூலிக்கப் படுகிறது.
வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து, மூன்று கி.மீ., தொலைவு கரடு முரடான காட்டு வழி பாதையை கடந்து அருவிக்கு செல்ல வேண்டும். தற்போது கோடை என்பதால் அருவியில் தண்ணீர் குறைந்துள்ளது.
அதனால் அருவி வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பார்க்கிங் பகுதியில் இருந்து, 750 மீட்டர் காட்டு வழி பாதையை கடந்து சென்றால் மலைகளின் பின்னணியில் ரம்மியமான பிரமாண்ட நீர்தேக்கம் அமைந்துள்ளது.
அருவிக்கு மாற்றாக நீர்தேக்கம் இருப்பதால் சுற்றுலா பயணியர் அங்கு குவிந்து வருகின்றனர். நீர்தேக்கத்தில், உடை மாற்றும் அறை, கழிப்பறை, குளியலறை வசதிகள் உள்ளன.
தெளிந்த நீர்த்தேக்கம்@@
நான்கு முதல் ஆறடி ஆழம் கொண்ட பிரம்மாண்ட நீர்தேக்கத்தின் அடிப்பகுதி முழுதும் பாறைகள் பரவி கிடக்கின்றன.
அந்த பாறைகள் தெளிவாக கண்களுக்கு தெரிவதால், ஆழம் இல்லாதது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
மலைகள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் கோடையின் வெப்பத்தை தணித்து கூலான குளியல் போட ஏற்ற இடமாக நீர்தேக்கம் இருப்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர். நீர்த்தேக்க பகுதியில் மகிழ்ச்சியாக குளிக்கின்றனர்.
அனுமதி நேரம்
உப்பலமடுகு சுற்றுலா தலத்தில், காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை 5:30 மணிக்கு மேல் சுற்றுலா பயணியர் வெளியேற்றப்படுகின்றனர்.

