
வெண்மனம்புதுாரில் மின் தடை பகுதிவாசிகள் கடும் அவதி
கடம்பத்துார் ஊராட்சி புதிய வெண்மனம்புதுாரில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் இரவில் பெண்கள், குழந்தைகள், வயதானோர் துாங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
முக்கியமாக இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதால் வயதானவர்களுக்கு சரியான காற்று வசதி இல்லாமல், சுவாச பிரச்னை ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து எற்படும் நிலை உள்ளது.
எனவே, இப்பகுதியில் அடிக்கடி இரவு நேரங்களில் தொடர்ந்து மின் தடை ஏற்படாதவாறு மின்வாரியத்தினர் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தா.ஸ்ரீதர், கடம்பத்துார்.
சேதமடைந்த மின்கம்பம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அம்பேத்கர் நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது.
இந்த மின்கம்பத்தின் அடிபாகம் முழுதும் சேதமடைந்து, சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வளைந்து காணப்படுகிறது.
இதனால், காற்று வேகமாக வீசினால் மின்கம்பம் விழும் அபாய நிலை உள்ளது. எனவே, மின்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.திலீப்குமார், திருவாலங்காடு.
இருளில் மிதக்கும் சூரியநகரம் வெளிச்சம் தருவது எப்போது?
திருத்தணி வட்டம் சூரியநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மராஜபுரம் கிராமத்தில், ஓராண்டுக்கு முன் மின்விளக்குகள் பழுதாகின.
ஆனால், இதுவரை மின்விளக்கை சீரமைத்து, ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இரவு நேரங்களில் மக்கள் தெருக்களில் நடமாட முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
சமூக விரோதிகள் இதை சாதகமாக பயன்படுத்தி, அடிக்கடி திருட்டு முயற்சி நடந்து வருகிறது. இதுகுறித்து சூரியநகரம் ஊராட்சியிடம் மனு அளித்தும் பயனில்லை. எனவே, ஒளிராத மின்விளக்குகளை சீரமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பகுதிவாசிகள், சூரியநகரம்.
திருத்தணி கோவில் பேருந்து சேவை ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்படுமா?
திருத்தணி முருகன் கோவிலில் முருக பெருமானை தரிசிக்க சென்னை சென்ட்ரல் மற்றும் ரேணிகுண்டா மார்க்கத்தில் இருந்து ரயில்கள் வாயிலாக, தினமும் 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணி ரயில் நிலையம் வருகின்றனர்.
பின், அங்கிருந்து மலைக்கோவிலுக்கு நேரிடையாக பேருந்து சேவை இல்லாததால், பெரும்பாலான பக்தர்கள் ஆட்டோ வாயிலாக மலைக்கோவிலுக்கு அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்கின்றனர்.
சில பக்தர்கள் முருகன் கோவில் தணிகை இல்லம் வரை, அரை கி.மீ., நடந்து சென்று, அங்கிருந்து கோவில் பேருந்து மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.
எனவே, மலைக்கோவிலில் இருந்து ரயில் நிலையம் வரை கோவில் பேருந்து சேவையை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.சதீஷ்குமார், திருத்தணி.
'தினமலர்' நாளிதழுக்கு நன்றி
திருவள்ளூர் ஒன்றியம், செவ்வாப்பேட்டை ஊராட்சி, எப்.சி.ஐ., காலனி, 2வது தெருவில் குடிநீர் குழாய் ஒன்று, உடைந்து தண்ணீர் விரயமாகி வந்தது. விரயமாகும் குடிநீர் குழாயை சுற்றிலும் தேங்கி, கொசு உற்பத்தியாகி, மக்களுக்கு மலேரியா, டெங்கு காய்ச்சல் ஏற்படும் நிலை இருந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழ் புகார் பெட்டியில் செய்தி வெளியானதும், ஊராட்சி நிர்வாகம் அதை சரிசெய்தது. செய்தி வெளியிட்ட 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.
- கே.கோபிநாதன், செவ்வாப்பேட்டை.

