ADDED : செப் 11, 2024 01:31 AM

திருத்தணி:திருத்தணி-- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை கோரமங்கலம் அருகே நந்தியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினரால் பல கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டி வாகனங்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்த பாலத்தின் வழியாக, 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இந்நிலையில் உயர்மட்ட பாலத்தை முறையாக நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிக்கவில்லை.
இதனால் பாலத்தின் மீது போடப்பட்ட சிமென்ட் மற்றும் தார்ச் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. ஏழு இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தை கவனிக்காமல் ஓட்டும் போது தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
பல முறை வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே மாவட்ட கலெக்டர் கோரமங்கலம் உயர்மட்ட பாலத்தை ஆய்வு செய்து சீரமைப்பு பணிகள் செய்ய உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.