/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
/
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED : ஏப் 08, 2024 07:18 AM

திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் விழாவில் நேற்று காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடந்தது.
திருத்தணி காந்தி நகர் திரவுபதியம்மன் கோவிலில், கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின், தீமிதி திருவிழா கடந்த மாதம், 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மதியம் மகா பாரத சொற்பொழிவும், இரவில் நாடகமும் நடந்து வந்தது.
மேலும் உற்சவர் அம்மன் திருவீதியுலா மற்றும் மூலவருக்கு சந்தன காப்பு, சிறப்பு அபிஷேகம் நடந்து வந்தது.
விழாவின் நிறைவு நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
மதியம், 12:00 மணிக்கு அக்னி குண்டத்தில் தீ மூட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அக்னி குண்டம் முன் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். தொடர்ந்து வாணவேடிக்கை மற்றும் அம்மன் ஊர்வலம் நடந்தது.
விழாவில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
l திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகப்பெருமானை வழிப்பட்டு செல்கின்றனர். நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்திற்கு மாறாக முருகன் மலைக் கோவிலில் காலை, 6:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
கொளுத்தும் வெயிலிலும், மலைக்கோவில் தேர் வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்ததால் பொதுவழியில், இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்துதரிசனம் செய்தனர்.
அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர். முன்னதாக அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
இரவு, 7:00 மணிக்கு உற்சவர் வெள்ளிமயில் வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார்.
கோடை வெயில் துவங்கியுள்ளதால் கோவில் நிர்வாகம் சார்பில், நீர்மோர், குடிநீர் மற்றும் வெள்ளப்பானகம் தேர் வீதியில் வழங்கப்பட்டது.

