/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் ரூ.4 லட்சம் மீன்பிடி வலைகள் தீக்கிரை
/
பழவேற்காடில் ரூ.4 லட்சம் மீன்பிடி வலைகள் தீக்கிரை
ADDED : ஜூலை 06, 2024 01:43 AM

பழவேற்காடு:பழவேற்காடு, பசியாவரம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். தொழிலுக்கு சென்று வந்தபின், பழவேற்காடு ஏரிக்கரை பகுதியில் தங்களது படகு மற்றும் வலைகளை வைத்திருப்பர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த, சிவக்குமார், குமார், சேகர், சாய்குமார் ஆகியோருக்கு சொந்தமான மீன்பிடி வலைகள் தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்தது.
கிராம மக்கள் அங்கு விரைந்து சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைப்பதற்குள், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் முழுதும் எரிந்து தீக்கிரையாகின.
இது குறித்து மீனவர்கள், திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் மீன்பிடி வலைகளை, மர்ம நபர்கள் தீவைத்து எரித்துள்ளது விசாரணையில் தெரிந்தது.
எரித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்னேரி காங்.,- எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் சென்று, எரிந்து சாம்பலான மீன்பிடி வலைகளை பார்வையிட்டார்.