/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆடு அடிக்கும் தொட்டி: வியாபாரிகள் எதிர்ப்பு
/
ஆடு அடிக்கும் தொட்டி: வியாபாரிகள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 02, 2024 06:51 AM
மீஞ்சூர்: மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 35க்கும் அதிகமான இறைச்சி கடைகள் உள்ளன. இறைச்சி கடை வைத்திருப்பவர்கள், ஆடுகளை அறுப்பதற்கு முன், ஆடு அடிக்கும் தொட்டிக்கு கொண்டு சென்று அவை உணவுக்காக அறுப்பதற்கு தகுதியானவையா என சுகாதார ஆய்வாளரிடம் சான்று பெறவேண்டும்.
பின், ஆடுகளை அறுத்து, அவற்றின் மீது பேரூராட்சியின் முத்திரை பதித்து கொண்டு சென்று, கடைகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
இதற்காக பேரூராட்சி சார்பில், ஆடு அடிக்கும் தொட்டிக்கான கட்டடம் கட்டி, அதை ஏலம் விட்டு, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக இறைச்சி கடை உரிமையாளர்களிடம், கட்டணம் வசூலிக்க வேண்டும்.
மீஞ்சூர் பேரூராட்சியில் ஆடு அடிக்கும் தொட்டிக்கான கட்டடம் இதுவரை அமைக்கவில்லை. இறைச்சி கடைகளிலேயே ஆடுகள் அறுக்கப்படுகிறது. அவற்றின் சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொள்வதில்லை.
இந்நிலையில், ஆடு அடிக்கும் தொட்டி அமைக்காமல், ஏலம் விடுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
அதற்கு இறைச்சி கடை உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர். இது குறித்து நேற்று இறைச்சி கடை உரிமையாளர்கள் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறியுள்ளதாவது:
மீஞ்சூர் பேரூராட்சியில், இதுநாள் வரை ஆடுஅடிக்கும் தொட்டி அமைத்து தரப்படவில்லை.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, அதற்காக ஏலம் விட்டு எங்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆடி அடிக்கு தொட்டியை அமைத்துவிட்டு, கட்டணம் வசூலிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டதை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக வரி வசூலிக்கவில்லை.
தற்போது, ஆடு தொட்டி அமைக்க ஏலம் விட திட்டமிட்டு உள்ளதாக அறிகிறோம். பேரூராட்சியில் முறையான ஆடு தொட்டி அமைத்தபின், உரிய கட்டணத்தை நிர்ணயித்து, அதன்பின் ஏலம் விட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.