ADDED : ஆக 05, 2024 02:20 AM

ஊத்துக்கோட்டை:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை இடையே, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், சூளைமேனி, தண்டலம், பாலவாக்கம், தாராட்சி உள்ளிட்ட முக்கிய கிராமங்கள் உள்ளன. இந்த சாலையில் இருந்து இணைப்பு சாலை வழியே, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், நகரி, ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் மேற்கண்ட சாலை வழியாக செல்கின்றன.
குறிப்பாக, சூளைமேனி அடுத்த தேர்வாய் சிப்காட் தொழிற்சாலையில் இருந்து தினமும், 300க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் செல்கின்றன.
தற்போது பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து செல்லும் பக்தர்கள் குண்டும், குழியுமான சாலையை பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை துறை சேதம் அடைந்த சாலையை சீர்படுத்தி வருகிறது.