/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகள் ரயில்களில் இணைக்க கோரிக்கை
/
முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகள் ரயில்களில் இணைக்க கோரிக்கை
முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகள் ரயில்களில் இணைக்க கோரிக்கை
முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகள் ரயில்களில் இணைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2024 11:05 PM
சென்னை: சென்னையில் இருந்து நெரிசல் மிக்க வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்களில், முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சென்னை ரயில் கோட்ட முன்னாள் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர் கூறியதாவது:
முன்பெல்லாம் இரவு நேர விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத நான்கு பெட்டிகளும், பகல் நேர விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத எட்டு பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டன. ஆனால், சமீப காலமாக விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளும், சிலீப்பர் பெட்டிகள் குறைத்து, மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டிகளை அதிகரித்து இயக்கப்படுகின்றன. இதனால், நடுத்தர மற்றும் சாதாரண பயணியர் அவதிப்படுகின்றனர்.
தென் மாவட்டங்கள் மற்றும் பீஹார், மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில், முன்பதிவு செய்யாத பயணியரும் ஏறுவதால், ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.
எனவே, சாதாரண பயணியரும் பயன்பெறும் வகையில் விரைவு ரயில்களில் கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும். இதனால், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணியர் நுழைவதையும் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படியே, ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகிறோம். பயணியரின் கோரிக்கைகள் குறித்து, ரயில்வே வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்' என்றனர்.