ADDED : ஏப் 16, 2024 05:57 AM
பூண்டி: பூண்டி ஒன்றியம் தோமூரில் 30 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காந்தி கிராமம், காஞ்சிபாடி, தோமூர், ராமஞ்சேரி இருளர் காலனியை சேர்ந்த பழங்குடியின மாணவர்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் மேல்நிலை வகுப்பு பயில கனகம்மாசத்திரம் அல்லது திருவள்ளுர் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இந்த மாணவர்கள் படிப்பை தவிர்த்து வருகின்றனர்.
குறிப்பாக பெண் குழந்தைகளை வெளி ஊர்களுக்கு சென்று பயில பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. இதனால் இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.இந்நிலையில் கடந்த கல்வியாண்டில், 164 அரசு உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த, பள்ளிக்கல்வி துறை தீர்மானித்தது.
அதில் இப்பள்ளி இடம்பெறாத நிலையில் பழங்குடியின மாணவர்கள் அதிகம் பயிலும் இந்த பள்ளியை நடப்பாண்டில் தரம் உயர்த்த கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

