/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்வாய்கண்டிகை 'சிப்காட்' தொழிற்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியால் உற்பத்தி பாதிப்பு பெரியபாளையத்தில் சாலை விரிவாக்கம் அவசியம்
/
தேர்வாய்கண்டிகை 'சிப்காட்' தொழிற்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியால் உற்பத்தி பாதிப்பு பெரியபாளையத்தில் சாலை விரிவாக்கம் அவசியம்
தேர்வாய்கண்டிகை 'சிப்காட்' தொழிற்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியால் உற்பத்தி பாதிப்பு பெரியபாளையத்தில் சாலை விரிவாக்கம் அவசியம்
தேர்வாய்கண்டிகை 'சிப்காட்' தொழிற்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியால் உற்பத்தி பாதிப்பு பெரியபாளையத்தில் சாலை விரிவாக்கம் அவசியம்
ADDED : ஆக 16, 2024 12:12 AM

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா தேர்வாய்கண்டிகை 'சிப்காட்' வளாகம், 2010ம் ஆண்டு, 1,127 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது.
தற்போது, மிஷ்லின் டயர், பிலிப்ஸ் கார்பன், பேட்டர் இந்தியா, சுந்தரம் க்ளேட்டன், வீல்ஸ் இந்தியா, பிரேக்ஸ் இந்தியா உட்பட மொத்தம், 46 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 10,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு, கன்டெய்னர் லாரிகள் உட்பட தினசரி, 400க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
இவை தவிர, நுாற்றுக்கணக்கான கார், வேன், பேருந்துகளில், தொழிலாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பயணிக்கின்றனர்.
ஸ்தம்பிக்கும் பெரியபாளையம்
மேற்கண்ட அனைத்து வகை வாகனங்களும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகத்திற்கு வந்து செல்கின்றன.
அந்த வாகனங்கள், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து கன்னிகைபேர், பெரியபாளையம், தண்டலம் வழியாக தேர்வாய்கண்டிகை வரை 27.4 கி.மீ., சாலையை கடந்து வர வேண்டும்.
இடைப்பட்ட சாலையில், வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்யும் பகுதியாக பெரியபாளையம் உள்ளது.
இங்குள்ள பேருந்து நிலையம், அடுத்ததாக மூன்று சாலை சந்திப்பு, அதற்கு அடுத்து ஆரணி ஆற்றுப்பாலம், இறுதியாக பவானி அம்மன் கோவில் என, அடுத்தடுத்து நான்கு பிடிகளில் இருந்து வாகனங்கள் விடுபட்டு செல்வது என்பது, வாகன ஓட்டிகளுக்கு மிக பெரிய சவாலாக இருந்து வருகிறது.
பெரியபாளையம் பவானி அம்மனை தரிசிக்க குவியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அவர்களின் வாகனங்களால், போக்குவரத்து மட்டுமின்றி தேர்வாய் கண்டிகை தொழிற்சாலைகளுக்கும், கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
பெரியபாளையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியால், உரிய நேரத்தில் தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் பல சமயங்கள், 30 நிமிடங்கள் காலதாமதாக 'ஷிப்ட்' துவங்க வேண்டிய நிலைக்கு தொழிற்சாலைகள் தள்ளப்படுகின்றன.
மேலும், உரிய நேரத்தில் உற்பத்தி பொருட்கள் அனுப்ப முடியாமலும், மூலப்பொருட்கள் கிடைக்க பெறாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக, தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
விரைவில் சீரமைப்பு
இது குறித்து, சம்பந்தப்பட்ட மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
ஜனப்பன்சத்திரம் துவங்கி பெரியபாளையம் வழியாக, ஊத்துக்கோட்டை வரை 32 கி.மீ., சாலையை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
பெரியபாளையம் புறவழிச்சாலை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஏற்கனவே ஒப்படைத்துவிட்டோம்.
சாலை முழுதுமாக மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கும் பட்சத்தில், பெரியபாளையம் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்சாலைகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.