ADDED : ஜூலை 01, 2024 02:05 AM

செங்குன்றம்:செங்குன்றம், காவாக்கரை தெரு, தேவன்பு தெரு சுற்றுவட்டாரங்களில் இருந்து, மழைநீர் வெளியற வசதியாக, ஜி.என்.டி., சாலை காய்கறி மார்க்கெட் வரை, 10 அடி அகலம், 7 அடி ஆழம் கொண்ட வடிகால் இருந்தது.
நாளடைவில், இதில் கட்டடக்கழிவுகள், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு, முழுமையாக துார்ந்து விட்டது. அங்கு குவியும் குப்பையை, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகமும் அகற்றுவதில்லை. இதனால், பலத்த மழையின்போது மழைநீர் வெளியேற வழியின்றி, மேற்கண்ட தெருக்களில் தேங்கி வீடுகளுக்குள் பாய்கிறது.
நாளுக்கு நாள் அங்கு குவியும் குப்பை கழிவுகளால், கொசு உற்பத்தியுடன் சுகாதார சீர்கேடும் அதிகரித்துள்ளது. இது குறித்து, நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் புகார் செய்தால், சுகாதார அலுவலர்கள், 'அதற்கு கூடுதல் துாய்மை பணியாளர்கள் மற்றும் வாகன செலவு அதிகமாகும்' எனக்கூறி, 'கவனிப்பு' எதிர்பார்ப்பதால் பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பருவ மழைக்கு முன், துார்ந்து போன வடிகாலை துார் வார, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.