/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபர் தீக்குளித்த சம்பவம் தாசில்தார் பணியிட மாற்றம்
/
வாலிபர் தீக்குளித்த சம்பவம் தாசில்தார் பணியிட மாற்றம்
வாலிபர் தீக்குளித்த சம்பவம் தாசில்தார் பணியிட மாற்றம்
வாலிபர் தீக்குளித்த சம்பவம் தாசில்தார் பணியிட மாற்றம்
ADDED : ஜூலை 06, 2024 01:47 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், 33. நடன கலைஞர்.
நேற்று முன்தினம், அவர் வசிக்கும் ஓட்டு வீடு, பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக தெரிவித்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி தலைமையிலான வருவாய் துறையினர் வீட்டை இடிக்க சென்றனர்.
போலீசாரும், தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, ராஜ்குமார் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் வருவாய் துறையினர் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர்.
குடியிருந்த வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, வாலிபர் தீக்குளித்த சம்பவத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அரசின் போக்கை கண்டித்து பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கவனக்குறைவாக செயல்பட்ட கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் பாக்ய ஷர்மா ஆகியோரை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
தாசில்தார் பிரீத்தி காத்திருப்போர் பட்டியலுக்கும், வருவாய் ஆய்வாளர் கோமதி ஊத்துக்கோட்டை தாலுகாவுக்கும், கிராம நிர்வாக அலுவலர் பாக்ய ஷர்மா, முக்கரம்பாக்கம் கிராமத்திற்கும் மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து ஆவடி தனி தாசில்தார் - நகர நிலவரி திட்டம் சரவணகுமாரி, கும்மிடிப்பூண்டி தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.