/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசே மின்சாரம் திருடுகிறது திருடாதே! வேலியே பயிரை மேய்கிறது
/
அரசே மின்சாரம் திருடுகிறது திருடாதே! வேலியே பயிரை மேய்கிறது
அரசே மின்சாரம் திருடுகிறது திருடாதே! வேலியே பயிரை மேய்கிறது
அரசே மின்சாரம் திருடுகிறது திருடாதே! வேலியே பயிரை மேய்கிறது
ADDED : பிப் 22, 2025 01:49 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு சார்பில் கட்டி வரும் பழங்குடியின மக்கள் தொகுப்பு வீடு கட்டுமான பணிக்கும், கட்டி முடிக்கப்பட்டு மின்இணைப்பு பெறாத அங்கன்வாடி மையத்திற்கும் திருட்டு மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது, வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், இருளஞ்சேரி ஊராட்சியில், பழங்குடியின மக்களுக்கு, தமிழக அரசு சார்பில், வீடுகள் கட்டும் திட்டம் 2022 - 23ம் ஆண்டு, தலா, 4.30 லட்சம் ரூபாய் மதிப்பில் 30 வீடுகளுக்கு மொத்தம், 1.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதையடுத்து, நரசிங்கபுரம் செல்லும் சாலையோரம் நீர் வரத்து கால்வாய் அருகே வீடுகள் கட்டும் பணி விறுவிறுவென நடந்து வருகிறது.
இந்த வீடு கட்டும் பணிக்காக, இப்பகுதி வழியே செல்லும் மின்கம்பியில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடி, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இது அப்பகுதியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ' கொக்கி போட்டு மின்சாரம் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அங்கன்வாடி மையம்
திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட எல்லம்பள்ளி காலனியில், அங்கன்வாடி மைய பழுதடைந்ததால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2ன் கீழ், 2023- 24ம் ஆண்டு, 16.55 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக அங்கன்வாடி மையம் கடந்தாண்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா, கடந்த, 9ம் தேதி நடந்தது. திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் துவக்கி வைத்தார்.
அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
புதிய கட்டடத்திற்கு மின்இணைப்பு பெறாமல் உள்ளது. தற்போது, இந்த அங்கன்வாடி மையத்திற்கு, அருகே வயல்வெளியில் செல்லும் மின்கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்டடம் திறப்பு விழாவிற்கும் கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டுள்ளது.
இதே போல் பெரிய கடம்பூர் ஊராட்சியிலும் அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் வசதி, மின்இணைப்பு பெறாமல் திருட்டு மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, இரண்டு அங்கன்வாடி மையத்திற்கும் மின்இணைப்பு பெற அறிவுறுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரண்டு அங்கன்வாடி மையங்களுக்கும் விரைவில் மின் இணைப்பு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
- நமது நிருபர் குழு-