/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காக்களூர் ஏரியில் படகு சவாரி வருமா?
/
காக்களூர் ஏரியில் படகு சவாரி வருமா?
ADDED : ஆக 20, 2024 11:56 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கும் வகையிலான எந்த வசதியும் இல்லை. இதனால், திருவள்ளூர் மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டி உள்ளது. திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்தேக்கத்திலும், குழந்தைகள் விளையாட அமைக்கப்பட்ட பூங்கா, முற்றிலும் சேதமடைந்து, சீரமைக்காமல் உள்ளது.
திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம், 100 ஏக்கர் பரப்பளவில், காக்களூர் ஏரி அமைந்துள்ளது. பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீர், கடந்த 30 ஆண்டுக்கு முன் விவசாயத்திற்கு பயன்பட்டது. தற்போது, விவசாய நிலங்கள் அனைத்தும் வீடுகளாக மாறியதால், நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக திகழ்கிறது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், காக்களூர் ஏரியில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை ஆழப்படுத்தி துார் வாரி, ஏரியைச் சுற்றி, 4 கிலோ மீட்டர் துாரத்திற்கு, நடைப் பயிற்சி பாதை அமைக்கப்பட்டது.
தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பிய நிலையில், காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோரும், பகுதிவாசிகளும் ஓய்வெடுக்கும் தளமாக உள்ளது.
திருவள்ளூர் நகரில் பொழுது போக்கு பூங்கா எதுவும் இல்லாத நிலையில், நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த ஏரியை சீரமைத்து, தண்ணீர் நிரப்பி, படகு சவாரி விட வேண்டும். இதனால், பகுதிவாசிகளுக்கு ஓய்வெடுக்கவும், பொழுதுபோக்கவும் உதவும். இதன் மூலம், அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.
எனவே, சுற்றுலா துறை மற்றும், பொதுப்பணி துறை இணைந்து படகு விடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

