/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் நகராட்சியுடன் 10 ஊராட்சிகள்... இணைப்பு! குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படும்
/
திருவள்ளூர் நகராட்சியுடன் 10 ஊராட்சிகள்... இணைப்பு! குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படும்
திருவள்ளூர் நகராட்சியுடன் 10 ஊராட்சிகள்... இணைப்பு! குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படும்
திருவள்ளூர் நகராட்சியுடன் 10 ஊராட்சிகள்... இணைப்பு! குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் மேம்படும்
ADDED : செப் 30, 2024 06:33 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியுடன், அருகில் உள்ள 10 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதனால், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படும். திருவள்ளூரில் ஊராட்சிகள் இணைந்த பின், மக்கள் தொகை, 1.30 லட்சமாக உயரும்.
திருவள்ளூர் நகரம், 1948ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின், திருவள்ளூரை தலைமையிடமாக கொண்டு, தனி மாவட்டம், 2000ல் உருவாக்கப்பட்டது.
தேர்வு நிலை நகராட்சியான திருவள்ளூர், 10.65 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. மொத்தம், 27 வார்டுகள் கொண்ட இந்நகராட்சியில், 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 55,722 பேர் வசித்து வருகின்றனர்.
திருவள்ளூர் நகரத்தை மேம்படுத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நகராட்சிக்கு போதிய நிதியாதாரம் இல்லை.
சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள், தொழில் வரி மற்றும் கட்டட உரிம கட்டணங்கள் ஆகியவை வாயிலாக, ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் அளவிற்கே நகராட்சியின் நிதியாதாரமாக உள்ளது.
பட்டியல்
எனவே, நகராட்சியை விரிவுபடுத்தும் வகையில், அருகில் உள்ள காக்களூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்துார், திருப்பாச்சூர், ஈக்காடு உள்ளிட்ட ஊராட்சிகளை, திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, 2012 முதல் நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு, வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில், புதிதாக திருநின்றவூர், பொன்னேரி ஆகிய இரண்டு நகராட்சிகள் உருவாக்கப்பட்டன.
சில மாதங்களுக்கு முன், தமிழக முதல்வர், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அருகில் உள்ள, ஊராட்சிகள் இணைக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, நகர்ப்புற வளர்ச்சி துறை, தமிழகம் முழுதும் கணக்கெடுப்பு நடத்தி, மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைக்கப்பட வேண்டிய ஊராட்சிகள் குறித்த பட்டியலை தயாரித்து, தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
காத்திருப்பு
அந்த வகையில், திருவள்ளூர் நகராட்சியில், சேலை, காக்களூர், ஈக்காடு, தலக்காஞ்சேரி, புட்லுார், திருப்பாச்சூர் - பகுதி, வெங்கத்துார், மேல்நல்லாத்துார், தண்ணீர்குளம், சிறுவானுார் ஆகிய, 10 ஊராட்சிகளை இணைக்க உள்ளதாக, பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் தரப்பில் கூறியதாவது:
திருவள்ளூர் நகராட்சியுடன், 10 ஊராட்சிகள் இணைக்கப்பட்டால், நகர வசதிகள் அனைத்தும் அந்த பகுதிகளுக்கு கிடைக்கும்.
சுத்தமான குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை, மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், நகரத்தில் கிடைப்பது போன்று ஊராட்சி மக்களுக்கு கிடைக்கும். இதனால், திருவள்ளூர் நகரமும் வளர்ச்சியடையும்.
மேலும், அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு வந்ததும், புதிதாக இணைக்கப்பட உள்ள ஊராட்சிகளில், வார்டுகள் வரையறை செய்யப்பட்ட பின், நகராட்சியின் வார்டு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது, திருவள்ளூர் நகராட்சியில், 56,074 பேர் வசித்து வருகின்றனர். கூடுதலாக, 10 ஊராட்சிகள் இணையும்பட்சத்தில், திருவள்ளூரின் மக்கள் தொகை, 1 லட்சத்து 30,769 ஆக உயரும். நகராட்சியின் பரப்பளவு, 61.95 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும்.
திருவள்ளூர் நகராட்சியுடன் இணைய உள்ள ஊராட்சிகள்
ஊராட்சி மக்கள் தொகை
சேலை 3,405
காக்களூர் 14,528
ஈக்காடு 8,435
தலக்காஞ்சேரி 907
புட்லுார் 6,097
திருப்பாச்சூர்-பகுதி 8,886
வெங்கத்துார் 23,292
மேல்நல்லாத்துார் 4,160
தண்ணீர்குளம் 2,700
சிறுவானுார் 2,285
மொத்தம் 74,695

