/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பத்திர எழுத்தர் வீட்டில் 13 சவரன் கொள்ளை
/
பத்திர எழுத்தர் வீட்டில் 13 சவரன் கொள்ளை
ADDED : நவ 03, 2025 12:56 AM

பள்ளிப்பட்டு: பத்திர எழுத்தர் வீட்டில், நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு அடுத்த கர்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, 52. பத்திர எழுத்தரான இவர், பள்ளிப்பட்டு சார்- பதிவாளர் அலுவலகம் அருகே அலுவலகம் நடத்தி வருகிறார்.
இவரது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் திருப்பதிக்கு சென்றார். இவரது மனைவி ரஜினி, ஆந்திர மாநிலம், புத்துாரில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், கர்லம்பாக்கத்தில் பூட்டிக் கிடந்த பழனி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர், பழனிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக வந்த பழனி, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, 13 சவரன் தங்க நகை, 900 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 85,000 ரூபாய் உள்ளிட்டவை மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பட்டு போலீசார், மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள், பழனியின் வீட்டு முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். நகை, பணத்தை கொள்ளை அடித்து விட்டு அங்கேயே மது அருந்தி விட்டு தப்பியுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னகளக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர், 48. இவர் நேற்று முன்தினம் மாலை தன் உறவினர் திருமண நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்னை சென்றார்.
நேற்று காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 சவரன் நகை திருடு போனது தெரிந்தது.
திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

