/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொங்கல் பண்டிகைக்கு 14,104 பஸ்கள் இயக்கம்
/
பொங்கல் பண்டிகைக்கு 14,104 பஸ்கள் இயக்கம்
ADDED : ஜன 07, 2025 07:42 AM
சென்னை : 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 5,736 சிறப்பு பேருந்துகள் உட்பட, 14,104 பேருந்துகள் இயக்கப்படும்' என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையில், சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும், 2,092 பேருந்துகளுடன் 5,736 சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து, மொத்தம் 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதுபோல், பயணியர் நெரிசல் இன்றி செல்ல வசதியாக, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படும்.
அதேபோல, பொங்கல் பண்டிகை முடிந்த பின், வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரையில், வெளியூரில் இருந்து சென்னைக்கு வழக்கமாக வரும், 10,460 பேருந்துகளுடன் 5,290 சிறப்பு பேருந்துகள் சேர்த்து இயக்கப்படும்.
பயணியர் பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044- 2474 9002, 044- 2628 0445, 044 -2628 1611 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்வதை தவிர்த்து, திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலுார் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.